ஜன.1 முதல் வங்கிக் கணக்கில் சமையல் எரிவாயு மானியம்: பெட்ரோலிய அமைச்சர்
பாட்னா: புத்தாண்டு முதல் சமையல் எரிவாயு மானியம், வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளரிடம் பேசிய அவர் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு அரசு தற்போது 426 ரூபாய் மானியமாக வழங்கி வருவதாக தெரிவித்தார்.
இந்த மானிய தொகையை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வழங்காமல் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்க மத்திய அரசு முடிவு எடுத்திருப்பதாக, கூறிய தர்மேந்திர பிரதான், முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 54 மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதி இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்றார். வரும் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து நாடு முழுவதும் திட்டம் அமலுக்கு வரும் என்ற அவர் மத்திய அரசு முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பாஜக அரசு பதவியேற்ற பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கப்பட்டு வருவதாக தெரிவித்த தர்மேந்திர பிரதான் பெட்ரோலிய பொருட்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான மதிப்பு கூட்டு வரி விதிக்க வேண்டும், என மாநில அரசுகளுக்கு கடிதம் எழுத போவதாக கூறினார்.
வங்கிக் கணக்கில் மானியம்
சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு வாடிக்கையாளர்களுக்கு தற்போது ரூ.426 மானியமாக வழங்கப்படுகிறது. ஆனால் இந்த மானியத்தை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் அந்த திட்டம் அமல் படுத்தப்பட உள்ளது.
இடது சாரிகள் கண்டனம்
சமையல் எரி வாயு மானியத்தை வங்கி கணக்கில் செலுத்தும் திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த போது அதை கடுமையாக எதிர்த்த பாஜக இப்போது அந்த திட்டத்தை தொடர முடிவு எடுத்துயிருப்பது, அக்கட்சியின் சந்தர்பவாதத்தையே காட்டுகிறது, என இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.