பட்ஜெட்டில் சர்க்கரை மனியம் ரத்து- அப்போ இனி ரேசனில் சர்க்கரை கிடைக்காதா?
நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரைக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஷாப்பிங் மால்களில் பாக்கெட்டில் போட்டு விற்பனை செய்யப்படும் சர்க்கரை கிலோ ரூ. 50 அல்லது ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. அண்ணாச்சி கடைகளில் கிலோ சர்க்கரை ரூ. 40க்கு கிடைக்கிறது.
காலை விடிந்த உடன் வெள்ளை சர்க்கரை போட்டு டீ அல்லது காபி குடித்து விட்டுதான் மற்ற வேலைகளை பார்ப்பார்கள். கடைகளில் சர்க்கரை வாங்குவதை விட ரேசன் கடைகளில் சர்க்கரை வாங்கி உபயோகித்து வந்தனர் பெரும்பாலான பொதுமக்கள். ஏனெனில் ரேசன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை 13 ரூபாய் 50 பைசாவிற்கு கிடைக்கிறது. இப்போது இதற்கும் வேட்டு வைத்து விட்டது மத்திய அரசு.
புதன்கிழமையன்று லோக்சபாவில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ரேசன்கடைகளில் விநியோகம் செய்யப்படும் சர்க்கரைக்கு மத்திய அரசு ஒரு கிலோவிற்கு மானியமாக ரூ. 18.50 வழங்கி வந்தது. மாநில அரசுகள் அந்த மானியத்தை பெற்று அதன் மூலம் ரேஷனில் குறைந்த விலைக்கு சர்க்கரை வினியோகித்து வருகிறது. இதன் காரணமாகவே ஒரு கிலோ ரூ. 13.50க்கு சர்க்கரை விற்பனை செய்யப்படுகிறது.
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 40 கோடி பேருக்கு சர்க்கரை என்ற அடிப்படையில் ஆண்டுக்கு சுமார் 21 லட்சம் டன் சர்க்கரை வாங்கப்பட்டு வருகிறது. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள், மேலே உள்ளவர்கள் என்ற வேறுபாடு கிடையாது. எனவே, ரேஷன் கடைகளில் விற்கப்படும் சர்க்கரைக்கான மானியத்தை இனி மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்காது.
ஏற்கனவே மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ.200 கோடி மட்டும் ஒதுக்கப்படும். இவ்வாறு ஜெட்லி தெரிவித்திருக்கிறார். இதனால், பட்ஜெட் அமலுக்கு வரும் ஏப்ரல் முதல் சர்க்கரை மானியம் கிடைக்காது என்ற அச்சம் எழுந்துள்ளது.
ரேசன் கடைகளில் தொடர்ந்து சர்க்கரை விற்பனை செய்யப்பட வேண்டுமெனில் மாநில அரசுகள்தான் அதற்கென நிதியை ஒதுக்க வேண்டும். மாநில அரசுகள் இந்த நிதிச்சுமையை ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அப்போ ஏழை, நடுத்தர மக்களுக்கு சர்க்கரை என்பது எட்டாக்கனியாகுமா? அல்லது மாநில அரசுகள் மனது வைக்குமா?