லஞ்ச ஊழலில் தமிழகத்திற்கு 3வது இடம் - அதிர்ச்சி ஆய்வு
இந்தியாவில் ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
டெல்லி: இந்தியாவிலேயே ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் கரப்சன், கமிஷன்,கலெக்சன் ஆட்சி நடக்கிறது என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். சான்றிதழ் பெறவும், பட்டா பெறவும் மின்மயமாக்கப்பட்ட நிலையில் லஞ்சமாக அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே எந்த சான்றிதழையும் பெற முடிகிறது.
இந்த நிலையில் 'தி டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல்' அமைப்பின் இந்தியக் கிளை நாடு முழுவதும் 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஊழல் தொடர்பான ஆய்வை நடத்தியதில் இந்திய அளவில் அதிகம் லஞ்ச, ஊழல் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசம் நம்பர் 1
15 மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் அவர்கள் எதிர்கொண்ட ஊழல் அனுபவங்கள் குறித்து ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான கேள்விகளை கேட்கப்பட்டன. அதற்கு ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்த பதில்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தன. ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
லஞ்சம் கொடுப்பது ஏன்
உத்தரப் பிரதேசத்தில், ஆய்வில் பங்கேற்ற 59 சதவிகிதம் பேர் தங்களின் பணி முடியவேண்டும் என்பதற்காக லஞ்சம் கொடுத்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
2வது இடத்தில் பஞ்சாப்
பஞ்சாப்பில் இது 56 சதவிகிதமாக உள்ளது. மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், சிக்கிம், ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், உத்தரகண்ட், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.
3வது இடத்தில் தமிழகம்
இப்பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்திலிருந்து இதில் பங்கேற்றவர்களில் 52% பேர் அரசு சேவையைப் பெற லஞ்சம் தர வேண்டியிருந்ததாகக் கூறியுள்ளனர்.
எந்தத்துறை முதலிடம்
தமிழகத்தில் அதிக ஊழல் நிறைந்த துறையாக திகழ்வது பத்திரப்பதிவுத் துறை ஆகும். 44% ஊழல் இத்துறையில்தான் நடப்பதாக தெரியவந்துள்ளது. அடுத்தபடியாக 17% ஊழல் காவல்துறையிலும், 15% ஊழல் உள்ளாட்சி அமைப்புகளிலும் நடைபெறுகின்றன. மின்துறை, போக்குவரத்துத் துறை, வரி செலுத்தும் துறை ஆகியவற்றில் 25% ஊழல் நடப்பதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
உதவாத கணினிமயம்
அலுவலகங்கள் கணினிமயமாக்கல் செய்யப்பட்டது ஊழல்களைக் குறைப்பதற்கு உதவவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தாங்கள் லஞ்சம் வழங்கும் அரசு தாங்கள் லஞ்சம் வழங்கும் அரசு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டவையாக இருந்தாலும் அங்கு சிசிடிவி இல்லை என்று பெரும்பாலானோர் கூறியுள்ளனர். காவல்துறையினருக்கு லஞ்சம் வழங்குவது கடந்த சில ஆண்டுகளில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பத்திரப்பதிவு அலுவலக அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்குவது அதிகரித்துள்ளது.
ஆட்சியாளர்கள் பொறுப்பு
ஊழல் பட்டியலில் தமிழகம் 3ஆவது இடம் பிடித்திருப்பது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல்கள் நிறைந்த மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமல்ல. ஆட்சியாளர்கள் நேர்மையாளர்களாக இல்லாதது தான். இதற்கு ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரிகள் மீது புகார்
நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கும் வகையில் சேவை உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் சேவை வழங்கப்படாவிட்டால், அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது புகார் செய்து தேவையான சான்றிதழ்களை பெறலாம். மேலும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரூ.5000 வரை இழப்பீடு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அரசு நிர்வாகத்தில் ஊழல் தொடர வேண்டும் என்பதற்காகவே இச்சட்டத்தை கொண்டு வர தமிழக ஆட்சியாளர்கள் மறுக்கின்றனர் என்றும் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.