பட்டாசு புகை டெங்கு கொசுக்களுக்குப் பகை - சிவகாசி தொழிலாளர்களின் குரல் உச்சநீதிமன்றத்தை எட்டுமா?
தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, சென்னையில் பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
Recommended Video
சென்னை: 'மழைக்குத் தேவை இடி, விழாவுக்குத் தேவை வெடி', 'பட்டாசு புகை டெங்கு கொசுக்களுக்குப் பகை' என்ற முழக்கத்துடன் பட்டாசு உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் முழக்கம் உச்சநீதிமன்றத்தின் கதவுகளை எட்ட வேண்டும்,பட்டாசு வெடிக்கவும், உற்பத்தி செய்யவும் விதிக்கப்பட்ட தடைகளை நீக்க வேண்டும் என்பதே சிவகாசி மக்களின் கோரிக்கையாகும்.
பண்டிகை என்றாலே பட்டாசுதான். பட்டாசு உற்பத்திக்கு பெயர் பெற்ற சிவகாசியில் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. பூ பூவாய் மத்தாப்பு சிதறும் வான வேடிக்கைகள் காட்டும் பாட்டாசுகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் என்றைக்குமே மகிழ்ச்சியில்லை. பல கோடிக்கான ரூபாய் வருமானம் ஈட்டித்தரும் சிவகாசி மக்களின் வாழ்க்கையில் கடந்த சில ஆண்டு காலமாகவே சோதனைதான்.
காற்றில் மாசு ஏற்படுகிறது என்று கடந்த ஆண்டு பட்டாசு வெடிக்க தடை உச்சநீதிமன்றம் தடை விதித்தது, இந்த தடையை நீக்க வலியுறுத்தி இரண்டு மாத காலமாக போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதம், கடையடைப்பு நடத்தி தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினர் பட்டாசு தொழிலாளர்கள். இந்த ஆண்டும் எட்டு லட்சம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது.
பண்டிகையில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு
கடந்த அக்டோபர் 23ஆம் தேதியன்று, பட்டாசு வெடிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது, பட்டாசு உற்பத்தி மற்றும் அவற்றின் விற்பனைக்குத் தடையில்லை என்று தெரிவித்தது. அதே நேரத்தில், குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டுமென்று கட்டுப்பாடுகள் விதித்தது. தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரையும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் நள்ளிரவு 11.45 முதல் 12.30 வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு அறிவிப்பு
இதற்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதற்கு விளக்கமளித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க முடியாது என்று கூறியது. இரண்டு மணி நேரம் எதுவென்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசு நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தது. இதையடுத்து, தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. இது பொதுமக்கள் மத்தியிலும் பட்டாசு உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
காலவரையற்ற போராட்டம்
பட்டாசு வெடிப்பது குறித்த நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி, நவம்பர் 12ஆம் தேதியன்று சிவகாசியில் நடந்த பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பட்டாசு ஆலை உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர்.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை நீக்க வேண்டும்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிவேல், செந்தமிழன், மதிமுகவைச் சேர்ந்த மல்லை சத்யா உட்படப் பலர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். பட்டாசு வெடிப்பதற்கான நேரம், பசுமைப் பட்டாசு குறித்த உத்தரவுகளை உச்சநீதிமன்றம் நீக்க வேண்டுமென்று இதில் கோரிக்கை விடுக்கப்பட்டது. உச்சநீதிமன்ற ஆணையால் சிவகாசியில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கவில்லை என்றும் சிறப்பு சட்டம் இயற்றி பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும் பட்டாசு வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
டெங்கு கொசுக்களுக்கு பகை
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளால் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
இந்தப் போராட்டத்தின்போது, தடையை மீறி மத்தாப்பு கொளுத்தினர். மழைக்குத் தேவை இடி, விழாவுக்குத் தேவை வெடி, பட்டாசு புகை டெங்கு கொசுக்களுக்குப் பகை என்பது போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளைக் கையில் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள், பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென்று தெரிவித்தனர். பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் குரல் உச்சநீதிமன்றத்தின் வாசலை எட்டினால் மட்டுமே குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.