தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ. 40,530 கோடி - நாட்டிலேயே 3வது இடம்
நாட்டில் உத்திரப் பிரதேச மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.49,960 கோடியாகவும், ராஜஸ்தான் மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.43,150 கோடியாகவும் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
டெல்லி: நாட்டிலேயே அதிக நிதிப் பற்றாக்குறை கொண்ட மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.40,530 கோடியாக உள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
2017-18 நிதியாண்டின் மாநிலங்களுக்கான கையேடு மத்திய ரிசர்வ் வங்கியால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக உத்திரப் பிரதேச மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.49,960 கோடியாகவும், ராஜஸ்தான் மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.43,150 கோடியாகவும் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது. அதன் நிதிப் பற்றாக்குறை ரூ.40,530 கோடியாகும். தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை உயர்ந்துள்ளதற்குப் பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நிதிப் பற்றாக்குறை கடந்த ஆண்டைவிட அதிகரித்து இருக்கிறது. 2014-15 நிதி ஆண்டில் தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறை ரூ. 32 ஆயிரத்து 300 கோடியாக இருந்தது. 2017ம் ஆண்டில் ரூ.40,530 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது.
2012-13ஆண்டில் ரூ.1,760 கோடி உபரி நிதி இருந்தது. ஆனால் அது அடுத்த ஆண்டு ரூ.1,790 கோடி பற்றாக்குறையாக மாறியது. 2014-15ஆம் ஆண்டு நிதி ஆண்டில் 258 சதவிகிதமும், 2015-16ஆண்டில் 48 சதவிகிதமும், 2016-17ஆண்டில் 67 சதவிகிதமும் பற்றாக்குறை அதிகரித்து உள்ளன. இந்த அளவிற்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டதற்கு இலவச திட்டங்கள் தான் முக்கிய காரணம் என்று கூறுகின்றனர். மேலும் வரி வசூலில் போதிய கவனமின்மை, கடுமையான நடவடிக்கை எடுக்காதது போன்றவையும் வரி வருவாய் பற்றாக்குறைக்கு காரணம் என்று சொல்கின்றனர்.
தமிழ்நாடு அரசியல் ரீதியாகவும், நிதிச் சூழலிலும் நெருக்கடியான சூழலில் பயணிக்கிறது. நிலையில்லா அரசியல் சூழல் காரணமாக அம்மாநிலத்தின் பொருளாதாரத்தில் புதிய முதலீடுகள் கிடைப்பதில் பின்னடைவு ஏற்படும். இதுபோன்ற காரணங்களால் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறையில் பாதிப்பு ஏற்படுகிறது. நிதிப் பற்றாக்குறைக்கான நிதி அளவுருக்களை ஒரு மாநிலம் மீறும் போது அதன் கடன் அதிகரித்து, அம்மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை தரவரிசை திருத்தியமைக்கப்படுகிறது. நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டத்தின் விளிம்பு மதிப்பைத் தமிழகம் 3 சதவிகிதம் மீறியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் உதய் திட்டத்தால்தான் தமிழகத்துக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படுவதாகத் தமிழக அரசு கூறுகிறது. ஆனால் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் உதய் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. இவற்றின் நிதிப் பற்றாக்குறை தமிழகத்தை விடக் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிராவின் நிதிப் பற்றாக்குறை ரூ.35,030 கோடியாகவும், கர்நாடகாவின் நிதிப் பற்றாக்குறை ரூ.25,660 கோடியாகவும் இருக்கிறது.
கடந்த 2016-17ஆம் நிதி ஆண்டின் முடிவில் மாநிலங்களின் நிதிப்பற்றாக் குறை ரூ.4.93 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. உத்தர பிர தேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிதிப்பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. தமிழகம் 3வது இடத்தில் இருக்கிறது. 1991ஆம் ஆண்டில் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை ரூ.18,790 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.