பங்கு சந்தை வரலாற்றில் முதல் முறையாக.. டாடா கன்சல்டன்சி நிறுவனம் புதிய சாதனை
டெல்லி: டாடா கன்சல்டன்சி நிறுவனம், பங்கு சந்தையில் இன்று புதிதாக ஒரு சாதனையை படைத்துள்ளது. பங்கு சந்தையில் 100 பில்லியன் டாலர் பங்கு மூலதனத்தை (market capitalisation) தொட்ட இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற பெருமையை டிசிஎஸ் பெற்றுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு இந்த சாதனை பதிவாகியுள்ளது. மும்பை பங்கு சந்தையில், நேற்றை நாள் முடிவில் டிசிஎஸ் பங்குகள் ரூ.3545 என்ற விலையில் இருந்தன. இன்று காலை இது 4 சதவீதம் உயர்ந்தது. இதன் மூலம், பங்கு மூலதன மதிப்பு ரூ.102.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பாக உயர்ந்தது.
இதற்கு முன்பாக பங்கு சந்தையில் எந்த ஒரு இந்திய நிறுவனத்தின் பங்கு மூலதன மதிப்பு 100 பில்லியன் என்ற மைல் கல்லை தொட்டது இல்லை. மொத்த பங்குகள் எண்ணிக்கை மற்றும் தற்போதைய அவற்றின் மதிப்பு ஆகியவற்றை பெருக்குவதன் மூலம் கிடைப்பதுதான் பங்கு மூலதனம். பங்கு சந்தையில் ஒரு நிறுவனத்தின் மதிப்பை அறிய உதவுவது இந்த கணக்கீடுதான்.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், டிசிஎஸ் நிகர லாபம் 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது. நிகர லாபத்தின் மதிப்பு ரூ.6925 கோடியாகும். இந்த அறிவிப்பு வெளியான நிலையில், பங்கு சந்தையிலும், இதன் பங்கு மதிப்பு அதிகரித்துவிட்டது.
மற்றொரு காரணம், டிசிஎஸ் தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் அறிவித்துள்ளதும்தான். 2004ம் ஆண்டு பங்கு சந்தையில் டிசிஎஸ் நிறுவனம் லிட்ஸ் ஆன பிறகு, 2006 மற்றும் 2009ம் ஆண்டிலும் இதுபோன்ற போனசை அறிவித்தது. இப்போது மூன்றாவது முறையாக டிசிஎஸ் அறிவித்துள்ளது.