தொலைத் தொடர்புத் துறையில் வேலை இழப்பு தவிர்க்க முடியாதது - திறன் மேம்பாட்டு குழு தலைவர்
இந்திய தொலைத் தொடர்புத் துறையில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் புதிதாக 10 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: தொலைத் தொடர்புத் துறையில் தற்போது வேலை இழப்பு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. இந்த நிலைமை இன்னமும் ஒன்பது மாதங்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது. அதன்பிறகு நிலைமை சீரடையும் என்று
தொலைத் தொடர்புத் துறையின் திறன் மேம்பாட்டு குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்திய தொலைத் தொடர்புத் துறையில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் புதிதாக 10 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இதர துறைகளிலும் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை சுமார் 2 மில்லியனைத் தொடும். ஆனால், அதற்கேற்றவாரு அவர்களின் கல்வித் தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலை கிடைப்பதென்பது சுமார் 10 சதவிகிதத்திற்கும் குறைவே. அதே சமயத்தில் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு காரணங்களால் உற்பத்தி குறைவு, திறமையின்மை மற்றம் நிதிச் சிக்கல்களால் வேலை இழப்பு என்பது 10 சதவிகிதத்திற்கும் அதிகமாகவே உள்ளது.
நாட்டின் தொலைத் தொடர்புத் துறையில் மட்டும் கடந்த ஆண்டில் சுமார் 40000 வேலை இழப்பு நடந்துள்ளதாக புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. இந்த வேலை இழப்பு என்பது மேலும் ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் இன்னும் 80000 முதல் 90000 வரையிலும் வேலை இழப்பு இருக்கக்கூடும் என்றும் அந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
தொலைத் தொடர்புத் துறையில் தற்போது சுமார் 40 லட்சம் ஊழியர்கள் வேலை செய்வதாகவும், அந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து இன்னும் ஐந்து ஆண்டுகளில் 14.30 மில்லியன் வேலை வாய்ப்புகள் தொலைத் தொடர்பு மற்றம் அது தொடர்பான உற்பத்தி துறையிலும் உருவாக்கப்படும் என்றும் தெரிகிறது.
இதுபற்றி விளக்கமளித்த தொலைத் தொடர்புத் துறையின் திறன் மேம்பாட்டு கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.பி கோச்சார், தற்போது தொலைத் தொடர்புத் துறையில் வேலை இழப்பு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. இந்த நிலைமை இன்னமும் ஒன்பது மாதங்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது. அதன்பிறகு நிலைமை சீரடையும்.
தொலைத் தொடர்புத் துறையில் சுமார் 4 மில்லியன் ஊழியர்கள் உள்ளதாகவும், இது வரும் ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து சுமார் 14.30 மில்லியன் வேலை வாய்ப்புகள் தொலைத் தொடர்பு மற்றும் அது தொடர்பான உற்பத்தித் துறையிலும் உருவாக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டில் தற்போது உற்பத்தித் துறைக்கு ஊழியர்களின் தேவை அதிக அளவில் தேவைப்படுகிறது, கூடவே வேகமாக வளர்ந்து வரும் தொலைத் தொடர்புத் துறையில், தொலைபேசி கருவிகள், கட்டமைப்பு மற்றும் அது தொடர்பான சேவைத் துறையிலும் ஊழியர்களின் தேவை அதிக அளவில் உள்ளது. அதுவும் தொலைபேசி கருவிகளை உற்பத்தி செய்யும் உற்பத்தித் துறைக்கு சுமார் 14.2 லட்சம் ஊழியர்கள் தேவைப்படுகின்றது. எனவே தேவையை பூர்த்தி செய்யவேண்டியது எங்களின் கடமையாகும் என்று கூடுதல் தகவலை அவர் தெரிவித்தார்.