கடன் வாங்குபவர்கள் திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது - உர்ஜித் படேல்
கடன் வாங்குபவர்கள் திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான காலகட்டம் தற்போது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறியுள்ளார்.
டெல்லி: கடன் வாங்குபவர்கள் திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான காலகட்டம் தற்போது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீடுகள் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறியுள்ளார்.
உயர்ந்து வரும் பணவீக்க விகிதம் மற்றும் குறைவான பொருளாதார வளர்ச்சியின் விளைவாக ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த விதமான மாற்றங்களையும் செய்யாமல் 6 சதவிகிமே தொடரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சியானது 6.7 சதவிகிமாக இருக்கும் என்று முன்னர் மதிப்பிடப்பட்டிருந்தது. அது தற்போது 6.6 சதவிகிமாக குறையக்கூடும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. மேலும் சில்லறை பணவீக்க விகிதமானது கடந்த டிசம்பர் மாதம் 5.2 சதவிகிமாக அதிகரித்தது. இது ரிசர்வ் வங்கி மதிப்பிட்ட 4 சதவிகிதத்தைக் காட்டிலும் அதிமாகும்.
உயர்ந்து வரும் சில்லறைப் பணவீக்க விகிதம், மற்றும் மந்த நிலையில் உள்ள பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றினால் வரும் 2018-19ம் நிதி ஆண்டின் நிதிப் பற்றாக்குறையானது எதிர்பார்த்ததை விட 3.50 சதவிகிமாக இருக்கும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழக்கமாக நடைபெறும் பணவியல் குறித்து முடிவெடுக்கும் ஆறு நபர்கள் அடங்கிய கூட்டம், இந்த ஆண்டின் முதல் கூட்டமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் இரு தினங்களுக்கு முன் கொல்கொத்தாவில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடாது என்று ஆளுநர் உர்ஜித் பட்டேல் உட்பட 5 உறுப்பினர்கள் வாக்களித்தனர். வட்டி விகிதத்தை உயர்த்தவேண்டும் என்று இயக்குநர் மைக்கேல் பத்ரா வாக்களித்தார்.
இறுதியில், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வட்டி விகிதத்தில் எந்த வித ரிஸ்க்கும் எடுக்க விரும்பாதது போல, ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிவிகிதத்தை (Repo Rate) எந்த விதமான மாற்றமும் செய்யாமல் பழைய விகிதமே தொடரும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதுபோலவே, ரிசர்வ் வங்கியானது, வங்கிகளுக்கு அளிக்கும் வட்டி விகிதமான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தையும் (Reverse Repo Ratio) மாற்றாமல் 5.75 சதவிகிதமே தொடரும் என்றும் அறிவித்துள்ளது. இது கடந்த எட்டு ஆண்டுகளில் மிகக் குறைந்த விகிதமாகும்.
கூட்டத்தின் முடிவில் பேட்டியளித்த ஆளுநர் உர்ஜித் பட்டேல், ரிசர்வ் வங்கியானது பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை. ரெப்போ விகிதமானது 6 சதவிகிதமே தொடரும். அதுபோலவே பிற வங்கிகளிடம் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதத்திலும் (Reverse Repo Ratio) எந்தவித மாற்றத்தையும் செய்யவில்லை. அதுவும் 5.75 சதவிகிமே தொடரும் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தெரிவித்தார்.
மேலும் நுகர்பொருள் பணவீக்க விகிமானது நடுத்தர காலத்தில் 4 சதவிகிதம் வரையில் இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது இரண்டு சதவிகிதம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம், என்று தெரிவித்தார்.
டிசம்பர் மாதத்திய சில்லறை பணவீக்க விகிமானது 4 சதவிகிமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டிருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டையும் தாண்டி 5.2 சதவிகித்தை தொட்டது.
மேலும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை செயல்படுத்துவதற்கு தேவைப்படும் கூடுதல் நிதிச் சுமை, சுங்க வரி போன்றவற்றால் நடப்பு ஆண்டின் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவிகிதமாக இருக்கும் என்பதாலும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்யாமல் பழைய விகிதமே தொடரும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி கடந்த ஆகஸ்டு மாதத்தில் 0.25 விகிதத்தை குறைத்தது. அதன்பின்பு நடந்த இரண்டு கூட்டங்களிலும் வட்டி விகிதத்தில் மாற்றத்தை செய்யவில்லை. அதுபோலவே, புதன்கிழமையன்று நடந்த கூட்டத்திலும் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பணவீக்கம் பற்றி பேசிய உர்ஜித் படேல், முதலீடு-உள்நாட்டு உற்பத்தி விகிதாச்சாரம் உயரும் என்று கருதுகிறேன். அதற்கான தெளிவான அறிகுறிகளும் நமக்குத் தென்படுகிறது என்றார்.
கடன் வாங்குபவர்கள் திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான காலகட்டம் தற்போது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் அதிகரித்தால் ஜிடிபி உயரும்.
கடந்த ஆறு மாதங்களில் உள்நாட்டுப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை நிர்ணயித்தல் பிரச்னை தான் இதில் முக்கியப் பங்காற்றியது. உள்நாட்டுக் காரணிகளை சரிசெய்தால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். நிதி மூலதனத்தில் இன்று போட்டிகள் நிறைந்துள்ளது.
தற்போது நிதிப் பற்றாக்குறை 3 சதவிகிதமாக உள்ளது. பணவீக்கம் குறைந்தால் இது மேலும் அதிகரிக்கும். நாணயக் கொள்கைகள் பணவீக்கம் குறித்த சிக்கல்களுக்கு தீர்வளிக்கும் என்றும் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.