வீட்டு வேலை செய்பவர்களுக்கு மாத சம்பளம் நிர்ணயித்த அரசு - குறைத்து கொடுத்தால் சிறை
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தற்போது தான் வீட்டு வேலை செய்யும் பெண்கள், மற்றும் ஆண்களுக்கான மாத ஊதியத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக வீட்டு வேலை செய்பவர்களுக்கான ஊதியத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. அரசு நிர்ணயம் செய்த ஊதியத்தை விடக் குறைவாக கொடுக்கும் வீட்டு உரிமையாளர் சிறையில் அடைக்கப்படுவார் என அரசு அறிவித்துள்ளது.
அதிகாலை தொடங்கி நள்ளிரவு உறங்கும் வரை வீடுகளில் அசராமல் வேலை செய்யும் பெண்கள் இருக்கின்றனர். அலுவலகத்திற்கு செல்லும் இல்லத்தரசிகளுக்கு வீட்டு வேலை செய்ய நல்ல ஆள் கிடைப்பது என்பது முன் ஜென்ம புண்ணியம். வீட்டு வேலை செய்யும் பெண்களை நம்பி சாவியை கொடுத்து விட்டு செல்லும் வீட்டு உரிமையாளர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். ஆனால் சம்பளம் மட்டும் குறைவாக கொடுக்கிறார்கள் என்பது பல பணிப்பெண்களின் குறையாக உள்ளது.
வீடு பெருக்கி துடைப்பது, பாத்திரம் சுத்தம் செய்வது, துணி துவைப்பது என பல வேலைகளை செய்கின்றனர் அவர்களுக்கு சம்பளம், போதவில்லை என்பது குறையாக உள்ளது. வீட்டு வேலை செய்பவர்கள் குறித்து, கோவை தொழிலாளர் நலத் துறை துணை ஆணையர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வுக்குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், வீட்டு வேலை செய்பவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செவிலியர் தினமும் ஒரு மணி நேரம் பணிபுரிந்தால் அதற்காகக் குறைந்தது மாநகராட்சி பகுதிகளில் 39 ரூபாயும், நகராட்சி பகுதிகளில் 35 ரூபாயும் ஊதியமாகத் தர வேண்டும். வீட்டு வேலை செய்பவர்கள் 8 மணி நேரம் பணிபுரிவதற்கு முறையே 8,050 ரூபாயும், 7,246 ரூபாயும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகரங்களைப் பொறுத்தவரை, சமையல் தோட்ட வேலை செய்பவர்களுக்கு மாத ஊதியமாகக் குறைந்தபட்சம் 7,823 ரூபாய் மற்றும் 7,041 ரூபாய் ஊதியமாகத் தர வேண்டும்.
துணி துவைப்பவர்கள், பாத்திரம் துலக்குபவர்களுக்கு மாநகராட்சிப் பகுதிகளில் 7,535 ரூபாயும், நகராட்சிப் பகுதிகளில் 6,836 ரூபாயும் ஊதியமாகத் தர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வீட்டிலேயே தங்கி வேலை பார்ப்பவர்களுக்கு இதைவிடக் கூடுதலாக 10% ஊதியம் அளிக்க வேண்டும்.
அரசு நிர்ணயித்த ஊதியத்தை விடக் குறைவான ஊதியம் வழங்கினால், அது மனித உரிமை மீறலாகும். இதன்படி, வேலை வழங்கும் வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.