ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பும் ஐடி நிறுவனங்கள் - 56000 பேரின் கதி?
இந்திய ஐடி நிறுவனங்கள் பெரும் அளவில் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் முனைப்பில் உள்ளன.
சென்னை: தகவல் தொழில்நுட்ப துறையில் மந்த நிலை காரணமாகவும் அமெரிக்காவில் இருந்து அதிகமாக புது பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாலும் இந்திய ஐடி நிறுவனங்களில் பணி நீக்கம் இந்த வருட இறுதியில் அதிகரிக்கும் என தெரிகிறது.
இந்தியாவைச் சேர்ந்த 7 முன்னணி ஐ.டி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 56,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இந்தியாவில் செயல்பட்டு வரும் மென்பொருள் நிறுவனங்கள் மந்த நிலையை சந்தித்து வருகின்றன. இதனை தொடர்ந்து பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை லே ஆஃப் எனப்படும் வேலை இழப்பு நடவடிக்கைக்கு உட்படுத்த முயன்று வருகின்றன.
பெர்பார்மென்ஸ் குறைவு என்ற பெயரில் மென்பொருள் நிறுவனத்திலிருந்து வேலையை விட்டு அனுப்பப்படுபவர்களில் அதிகம் பேர் நடுத்தர வயதுள்ளவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணியிழக்கும் ஊழியர்கள்
இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனங்களாக கருதப்படும் இன்போசிஸ், விப்ரோ,டெக் மகேந்திரா,காக்னிசண்ட்,டி.எக்ஸ்.சி டெல்னாலஜிஸ், கேப் ஜெமினி ஆகிய நிறுவனங்களில் சுமார் 1.24 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 4.5 சதவீத ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப அந்த நிறுவனங்கள் தற்போது முடிவெடுத்துள்ளன.
பணி நீக்கம்
ஏற்கனவே காக்னிசண்ட்,விப்ரோ ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்கள் பலரை வீட்டுக்கு அனுப்புவதில் உறுதியாக உள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் ஐந்தாவது பெரிய தொழில்நுட்ப நிறுவனமான டெக் மகேந்திரா, தனது நிறுவன ஊழியர்களில் கணிசமானவர்களுக்கு லே ஆஃப் கொடுக்க முடிவெடுத்துள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கையால் முதலில் 10 முதல் 20 ஆண்டுகள் அனுபவம் உடைய மூத்த ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.
செலவு குறைப்பு
பொதுவாக 20% வளர்ச்சி இருக்கும் தகவல் தொழில்நுட்ப துறையில், இந்த ஆண்டு 8% முதல் 10% தான் வளர்ச்சி இருக்கும் என தெரிகிறது. செலவுகளை குறைத்து கொள்ள வருடாவருடம் புதிய ஊழியர்களை நியமிப்பதால், தொழில்நுட்ப நிறுவனங்களில், மூத்த பணியாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.
முன்னணி நிறுவனங்கள்
முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட் தனது நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த ஊழியர்களுக்கு, 9 மாத சம்பளத்தைக் கொடுத்து தானாக ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியது. இதன்மூலம் ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்ப உள்ளது காக்னிசன்ட்.
10000 பேர் நீக்கம்
டி.எக்ஸ்.சி நிறுவனம் தங்களிடம் வேலை பார்க்கக் கூடிய 1,70,000 ஊழியர்களில் 10,000 பேருக்கு லே ஆஃப் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு லே ஆஃப் கொடுக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காகும்.
வேலை நீக்கம் ஏன்?
வேலையில் செயல்பாடு திருப்தியில்லை என்ற வகையில் சில நூறு பேருக்கு லே ஆஃப் கொடுக்க டெக் மகேந்திரா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இப்படி இந்தியாவின் முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்கள் அறிவித்து வரும் இந்த வேலை நீக்க அறிவிப்பில், அதிகம் பாதிக்கப்படுவது சீனியர் அதிகாரிகள்தான் என தெரியவந்துள்ளது.
சீனியர்கள் பாதிப்பு
சீனியர் அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் வழங்குவதற்கு பதிலாக, அந்த சம்பளத்தில் இரண்டு புதிய ஊழியர்களை வேலைக்கு எடுத்து சம்பளம் அளிக்கலாம் என தொழில்நுட்ப நிறுவனங்கள் கருதுகின்றன. புராஜெக்ட் இல்லாதபோது உயர் அதிகாரிகளுக்கு எதற்கு அதிக சம்பளம் என அந்த நிறுவனங்கள் நினைக்கின்றன.
இந்த வேலை நீக்க நடவடிக்கையின் முதல் கட்டமாக, லே ஆஃப் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ள ஊழியர்கள் 'பக்கெட் 4 ' என்ற பெயரில் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் உயர் பதவிகளில் உள்ள 3000 மேலாளர்களும் அடக்கம்.
புதியவர்கள் நியமனம் ஏன்?
சீனியர்கள் நிறுவனத்தின் நிரந்தர ஊழியர்கள் என்பதால், அவர்களுக்கு அனைத்து பணிப்பயன்களை வழங்க வேண்டிய சூழல் உள்ளது. அதே நேரத்தில் புதிய ஊழியர்களிடம், ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் இந்த பணிப்பலன்களை அளிக்கத் தேவையில்லை என அந்த நிறுவனங்கள் கணக்கு போடுகின்றனவாம்.
குறிவைக்கப்படும் சீனியர்கள்
தொடர்ந்து தொழில்நுட்ப உலகில் மந்த நிலை நீடித்து வருவதால், மற்ற முன்னணி மென்பொருள் நிறுவனங்களும் இது போன்ற வேலை நீக்க நடவடிக்கைகளை அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. இதிலும் நடுத்தர வயதுள்ள சீனியர் அதிகாரிகள்தான் குறி வைக்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அச்சத்தில் ஊழியர்கள்
மூன்று வாரங்களுக்கு முன்பு, விப்ரோ முதன்மை செயல் அலுவலர் அபித் அலி நீமுச்வாலா, ஊழியர்களிடம் பேசிய போது, நிறுவனத்தின் வருமானம் அதிகரிக்கவில்லை என்றால் இந்த வருடம் சுமார் 10% ஊழியர்கள் வேலையை விட்டு செல்லும் நிலை நேரிடும் என கூறினார். இதேபோல, கேப்ஜெமினி நிறுவனம் 9000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக 35 முக்கிய பொறுப்பில் இருக்கும் ஊழியர்களை அந்த நிறுவனம் ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளது.
கட்டாயப்படுத்தப்படும் ஊழியர்கள்
தனது தொழிலாளர்களில் 2.3 சதவீதம் பேரை, அதாவது 6000 ஊழியர்களை, விரைவில் பணி நீக்கம் செய்ய காக்னிசன்ட் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐ.டி. பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர், தமிழக தொழிலாளர் நல ஆணையரிடம் தாங்கள் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப் படுவதாக புகார் அளித்துள்ளனர்.
அப்டேட் ஆகணும் பாஸ்
பணி நீக்கம் குறித்து இன்போசிஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊழியர்களின் வேலை, மதிப்பீடு செய்யப்படுவதாகவும் அதன் அடிபடையில் பணி நீக்கம் நடைப்பெறுவதாகவும் கூறியுள்ளது. தற்போது வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்தில், ஊழியர்கள் தங்களது திறமைகளை காலத்துக்கு ஏற்றவாறு அதிகப்படுத்தி கொண்டால் மட்டுமே, தாக்குப்பிடிக்க முடியும் என கூறுகின்றனர் நிபுணர்கள்.
சக்கையை துப்பும் நிறுவனங்கள்
25 வயதில் ஐடி நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்து அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக விடிய விடிய வேலை செய்து நடுத்தர வயதை எட்டியுள்ள பல சீனியர்கள், ஐடி நிறுவனங்களின் வேலை நீக்க நடவடிக்கையினால் அதிர்ந்து போயுள்ளனர். இது நாள்வரை எங்களின் ரத்தத்தை உறிஞ்சி விட்டு தங்களை துப்பி விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.