எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் ரூ.87,300 கோடி நஷ்டம் - 2 வங்கிகள் லாபம்
எஸ்பிஐ உள்ளிட்ட இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் 2017-18 நிதியாண்டில் ரூ.87,300 கோடிக்கும் மேலான நஷ்டத்தை சந்தித்துள்ளன.
டெல்லி: இந்தியாவின் 21 பொதுத் துறை வங்கிகளில் இந்தியன் பேங்க் மற்றும் விஜயா பேங்க் தவிர்த்து இதர வங்கிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன.
2017-18 நிதியாண்டில் ரூ.87,300 கோடி நஷ்டமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2017-18ஆம் நிதி ஆண்டில் 21 அரசு வங்கிகளில் 2 வங்கிகளைத் தவிர 19 வங்கிகளுக்கு ரூ.87 ஆயிரத்து 357 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ்மோடியின் கைவரிசையால் ரூ.12 ஆயிரத்து 283 கோடி நஷ்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்தியன் பேங்க் ரூ.1,258.99 கோடியையும், விஜயா பேங்க் ரூ.727.02 கோடியையும் வருவாயாகப் பெற்றுள்ளன. எஸ்பிஐ வங்கியின் நிகர இழப்பு ரூ.6,547.45 கோடியாக இருக்கிறது. கடந்த 2016-17ஆண்டு லாபம் ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு பெரும் நஷ்டத்தை அந்த வங்கி சந்தித்துள்ளது. கடந்த 2016-17ம் ஆண்டில் ஸ்டேட் வங்கி ரூ.10 ஆயிரத்து 484.10 கோடி லாபம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
2017 டிசம்பர் வரையில் இந்திய வங்கிகளின் செயற்படா சொத்து மதிப்பு ரூ.8.31 லட்சம் கோடியாக இருந்தது. இழப்புகளைச் சந்தித்த வங்கிகளில் அதிகபட்சமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,283 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வங்கியில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி போலியான ஆவணங்களைக் கொண்டு ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்றுவிட்டார். இவ்வங்கி முந்தைய 2016-17 நிதியாண்டில் ரூ.1,324.8 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பொதுத் துறை வங்கிகளின் மொத்த நஷ்டம் ரூ.85,370 கோடியாக உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து ஐடிபிஐ வங்கியின் வருவாய் இழப்பு 2016-17 நிதியாண்டில் ரூ.5,158.14 கோடியிலிருந்து 2017-18 நிதியாண்டில் ரூ.8,237.93 கோடியாக உயர்ந்துள்ளது.
நலிந்து வரும் இந்திய வங்கித் துறையை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் 21 பொதுத் துறை வங்கிகளில் 11 வங்கிகள் மத்திய ரிசர்வ் வங்கியின் சீரமைப்புப் பணிக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வங்கிகளுக்கு ஆண்டுக்கு ஆண்டுக்கு வாராக்கடன், செயல்படா சொத்துக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன. கடந்த 201ஆம் ஆண்டு டிசம்பர் வரை அரசு வங்கிகளின் வாராக்கடன் ரூ.8.31 லட்சம் கோடியாகும்.