ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் - வர்த்தகப் பற்றாக்குறை ரூ. 1 லட்சம் கோடியாக உயர்வு
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, கடந்த மே மாதத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.
டெல்லி: கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதன் இறக்குமதி 50 சதவிகிதம் அதிகரித்திருப்பதன் காரணமாகவே, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவாக, ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது
நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மே மாதத்தில் 14.62 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.
நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வித்தியாசத்தையே நாம் வர்த்தகப் பற்றாக்குறை என அழைக்கிறோம்.
ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகமாக இருந்தால் இது நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும், அதுவே இறக்குமதி அதிகமாக இருந்தால் நாணய மதிப்பு சரியும். இதுமட்டும் அல்லாமல் பொருளாதாரத்தையும் வர்த்தகச் சந்தையையும் விரிவாக்கம் செய்ய வேண்டும், அதோடு உலக நாடுகளின் தேவையை உணர்ந்து பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்பதும் உணர்த்தும் நிலை இது.
தற்போது இந்தியா இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட நிலையில் தான் உள்ளது.
மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நாட்டின் மே மாத வர்த்தகம் குறித்து கூறுகையில், "மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் 28.18 சதவிகிதம் உயர்வைக் கண்டு 28.86 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. அதேநேரத்தில் நாட்டின் இறக்குமதியும் 14.85 விழுக்காடு உயர்வைக் கண்டு 43.48 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இதனால் மே மாத வர்த்தகப் பற்றாக்குறை 14.62 பில்லியன் டாலர்களாக உள்ளது" என்று கூறியுள்ளார்.
பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதன் இறக்குமதி 50 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாகவே, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவாக, ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்றும் மத்திய வர்த்தக தொழில்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 13.84 பில்லியன் டாலர்களாக இருந்தது. மே மாதத்தில் அதிகம் இறக்குமதி செய்யப்பட்டது எண்ணெய் பொருட்கள்தான். ஒட்டுமொத்த இறக்குமதியில் 49.46 விழுக்காடு எண்ணெய் பொருட்களாகும். இதன் மதிப்பு 11.5 பில்லியன் டாலர். சர்வதேச அளவில் மீண்டும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் முந்தைய மாதங்களைக் காட்டிலும் எண்ணெய் பொருட்களின் இறக்குமதி மதிப்பு அதிகரித்துள்ளது. அதேபோல மே மாதத்தில் தங்கம் இறக்குமதி மதிப்பும் 16.6 விழுக்காடு அதிகரித்து 1.18 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் வர்த்தகப்பற்றாக்குறை 1372 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.