என்னை நீக்கினால் அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் காணும்... மக்கள் ஏழைகளாவார்கள் - ட்ரம்ப்
என்னை பதவி நீக்கம் செய்தால் அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் காணும் என்றும் மக்கள் ஏழைகளாவார்கள் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
நியூயார்க்: தன்னுடைய பதவி பறிக்கப்பட்டால் அமெரிக்கா பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியடையும், பங்குச்சந்தை சரிவடையும், மக்கள் ஏழைகளாவார்கள் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவில் புயல் வீசியது. அந்த புயலின் தாக்கமே ஓயாத நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கருணாநிதி மரணமடைந்தார் இது திமுகவில் மிகப்பெரிய சூறாவளியை ஏற்படுத்தப் போகிறது. தமிழக அரசியல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அமெரிக்க அரசியலில் சுனாமியே ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, ஆபாச பட நடிகை உள்பட 2 பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார் சுமத்தினர். அவர்களுக்கு ட்ரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேன் கோஹன் பணம் கொடுத்து வாயை அடைத்ததாக புகார் எழுந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றியவர் மைக்கேல் கோவன்.
தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பிரச்சாரம் தொடர்பான செலவுகளை மைக்கேல் கோவன் கவனித்து வந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது ட்ரம்ப் உடனான உறவைப் பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று போர்னோ வகை திரைப்படங்களில் நடிக்கும் ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவருக்கு மைக்கேல் கோவன் 1,30,000 டாலர் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட கோகன், ‘வேட்பாளர்' கேட்டுக்கொண்டதால் தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அந்த நிதியைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பிற்கு நெருக்கடி
இதேபோல் வரி மோசடி, வங்கி மோசடி உட்பட எட்டு மோசடிகளில் ஈடுபட்டதாக ட்ரம்பின் பிரசாரக் குழு தலைவராக இருந்த பால் மனாபோர்ட் மீது தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என விர்ஜீனியா மாகாணத்தின் அலெக்ஸாண்ட்ரா நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த இரு சம்பவங்களால் டொனால்டு ட்ரம்ப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கைவிரித்த ட்ரம்ப்
இந்த நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "மைக்கேல் கோவன் நடிகை உட்பட இரண்டு பெண்களுக்கு நிதி வழங்கியது தொடர்பாக எதுவும் தெரியாது. பின்னரே அது தொடர்பாக தெரியவந்தது. மேலும் இது பிரச்சார விதிமீறல் கிடையாது. பிரச்சார நிதியில் இருந்து அவர்களுக்கு நிதி வழங்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
சிக்கலில் ட்ரம்ப்
வேட்பாளர் கேட்டுக்கொண்டதாலேயே நிதியைப் பயன்படுத்தியதாக கோகன் தெரிவித்த நிலையில், தனக்கு அனைத்தும் பின்னரே தெரியவந்தது என்று ட்ரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ட்ரம்ப் பதவிக்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது. ட்ரம்ப் அதிபராக உள்ளதால், இந்தக் குற்றச்சாட்டுக்காக அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அதை சாதாரண நீதிமன்றத்தில் செய்ய இயலாது.
பதவி நீக்கத் தீர்மானம்
ட்ரம்பின் பதவியை பறிக்க அமெரிக்க நாடாளுமன்றம் கண்டனத் தீர்மானம் கொண்டுவருவதுதான் சாத்தியமான சட்ட நடவடிக்கையாகத் தெரிகிறது. இதுதொடர்பாக சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலரும் அவருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
மக்கள் ஏழைகளாவார்கள்
இந்நிலையில், தன் மீது பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வந்தால் பங்கு சந்தை வீழ்ச்சியடையும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா பொருளாதாரம் ஆட்டம் காணும் என்றும் எச்சரித்துள்ளார் ட்ரம்ப். சிறப்பாகப் பணியாற்றிய ஒருவருக்கு எதிராக எப்படி நீங்கள் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வர முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அனைவரும் ஏழை ஆவார்கள் என்றும் டிவி பேட்டியில் ட்ரம்ப் கூறியுள்ளார்.