பட்ஜெட் 2019: தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்
2019 மத்திய பட்ஜெட்டின் போது வருமான வரி விலக்கை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
டெல்லி: மத்திய பாஜக அரசின் இறுதி மற்றும் இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோரின் வரி சுமையைக் குறைக்கும் விதத்தில் 5 லட்சம் ரூபாய் வரையிலும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டத்தை அறிவிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். 5 முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 10 சதவீத வரியும், 10 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான ஆண்டு வருமான உள்ளவர்களுக்கு 20 சதவிகித வரியும், 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் இருக்கும்போது 25 சதவிகிதத்தை வரியாகச் செலுத்துவது போல திருத்தங்கள் வேண்டும் என்று வணிகர்களும், தொழில் துறையினரும் மாத சம்பளம் வாங்குபவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கார்ப்ரேட் வரியையும் 25 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கலாம். குறைந்த கால மூலதன ஆதாயம் மீதான வரியை மட்டும் வைத்துக்கொண்டு, நீண்ட கால மூலதன ஆதாயம் மீதான வரியை நீக்க வேண்டும் என்பதும் தொழில் துறையினரின் கோரிக்கையாகும்.
ரூ.5 லட்சம் வரி விலக்கு
நடப்பு 2018-19ஆம் நிதி ஆண்டுக்கான தனி நபர் வருமான வரி விலக்கானது 2.5 லட்சமாக உள்ளது. இந்த வரி வரம்பை 5 லட்சமாக உயர்த்துமாறு கடந்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, ஆண்டு வருமானம் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலும் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விகிதத்தை 10 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைத்தது. கூடவே நிரந்தர கழிவாக (Standard Deduction) 40 ஆயிரம் வரையிலும் பயன்படுத்திக் கொள்ளும் சலுகையை அறிவித்தது.
அரசுக்கு வருவாய்
மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி இது குறித்து தெரிவிக்கையில், மத்திய அரசின் வருவாயில் 70 சதவிகிதம் வரையிலும் தனி நபர் வரி செலுத்துவதில் இருந்துதான் கிடைக்கிறது. அதனை நாங்கள் இழக்க விரும்பவில்லை. எனவே தான் தனிநபர் வருமான வரி விலக்கு சதவிகிதத்தில் நாங்கள் கை வைக்கவில்லை. இருந்தாலும் வரும் நிதி ஆண்டில் (2019-20) இது குறித்து நாங்கள் திடமான முடிவெடுப்போம் என்று நம்பிக்கை அளித்தார்.
அரசு சலுகை அறிவிக்க வாய்ப்பு
தற்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசின் 5 ஆண்டு ஆட்சியின் ஆயுட்காலம் வரும் மே மாதம் முடிவடைவதால், வரும் 2019-20ஆம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யமுடியாது. அதற்க பதிலாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இடைக்கால பட்ஜெட்டில் எந்தவிதமான சலுகையும் அறிவிக்க முடியாது. இருந்தாலும் வருமான வரி செலுத்துவோரின் ஓட்டுக்களை கவர்வதற்காக கவர்ச்சி சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பிப்ரவரி 1ல் இடைக்கால பட்ஜெட்
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வரும் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, மத்திய அரசு தொழில் நிறுவனங்களிடமும், பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் கேட்டிருந்தது. நிறுவனங்களும் இந்திய தொழில் மற்றும் வர்த்தகம் கூட்டமைப்பு சம்மேளனமும் (Federation of Indian Chambers of Commerce & Industry - FICCI) தங்களின் ஆலோசனைகளையும், பட்ஜெட் குறித்தான பரிந்துரைகளையும் தெரிவித்துள்ளன.
வரி விலக்கு
தொழில் மற்றும் வர்த்தகம் கூட்டமைப்பு அளித்துள்ள பரிந்துரையில், தனி நபர் பிரிவில், 60 வயது வரையிலும் உள்ளோர் 10 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக வருமானம் உள்ளவர்கள் 30 சதவிகிதம் வரி செலுத்துகின்றனர். இந்த வரி வரம்பை 20 லட்சமாக உயர்த்தவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளனர். இதன்மூலம் ஆண்டுக்கு கூடுதலாக 1 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும்.
மாத சம்பளதாரர்களுக்கு எவ்வளவு
மாதச் சம்பளம் வாங்குபவர்களில் 5 லட்சம் வரையிலும் ஆண்டு வருமானம் உள்ளவர்களின் வருமான வரி செலுத்துவதற்கான வரம்பை, தற்போது உள்ள குறைந்த பட்ச இலக்கான 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் வரையிலும் அதிகரிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் தனி நபர் பிரிவில் வருமான வரி செலுத்துவோர் ஆண்டுக்கு கூடுதலாக 12500 ரூபாய் வரையிலும் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறமுடியும்.
சலுகைகள் வெளியாகுமா
மத்தியில் ஆளும் பாஜகு அரசு முதல் மூன்று பட்ஜெட்டிலும் தனிநபர் பிரிவில் வருமான வரி செலுத்துவோருக்கு எந்தவிதமான சலுகையையும் அளிக்கவில்லை. கடந்த பட்ஜெட்டில் போனால் போகிறது என்று நிரந்தர கழிவு என்ற வகையில் 40 ஆயிரம் ரூபாய் சலுகை அளித்தது. ஆனால், வரும் மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதால், இடைக்கால பட்ஜெட்டில் தனிநபர் பிரிவில் வருமான வரி செலுத்துவோருக்கு அள்ளிக்கொடுப்பாரா? அல்லது தேர்தலை சாக்காக வைத்து டாட்டா காட்டிவிட்டு செல்வாரா?