மன்மோகன்சிங் முதல் அருண்ஜெட்லி வரை - 1991-2017 பட்ஜெட் பிளாஷ்பேக்
பிளாஷ் பேக் என்றாலே சுவாரஸ்யம்தான். 1991 முதல் 2017 வரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பற்றிய சுவாரஸ்ய பிளாஸ் பேக் பார்க்கலாம்.
டெல்லி: பிப்ரவரி 1ம் தேதி அன்று 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வது ஒரு புறம் இருக்கையில், 1991 முதல் 2017ம் ஆண்டு வரையிலும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது என்ன சிறப்பம்சங்கள் இடம் பெற்றன என்பதை பார்க்கலாம்.
1991ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்திய கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது ரிசர்வ் வங்கியின் முன்னால் ஆளுநரான மன்மோகன் சிங்கை பிரதமர் நரசிம்ம ராவ் நியமித்தார்.
Recommended Video
மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தது தொடங்கி, ப. சிதம்பரம், யஸ்வந்த் சின்கா, ஜஸ்வந்த் சிங், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் ப. சிதம்பரம், பிரனாப் முகர்ஜி, பாஜக ஆட்சியில் அருண் ஜெட்லி வரை கடந்த 27 ஆண்டுகளில் நிதியமைச்சர்கள் நாட்டின் நிநிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
இறக்குமதி வரி
1991 முதல் 1996 வரை காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்து பட்ஜெட் தாக்கல் செய்தார். முதன் முதலில் உலக பொருளாதாரத்தோடு போட்டி போடும் வகையில் பொருளாதார தாராளமயமாக்கல் என்ற உத்தியை கொண்டு வந்து ஏற்றுமதி இறக்குமதி கொள்கையில் மாற்றம் கொண்டு வந்து இறக்குமதிக்கான சுங்க வரியை 220 சதவிகிதத்தில் இருந்து 150 சதவிகிதமாக குறைத்தார்.
ராணுவ நிதி
1992ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வேலை வாய்ப்பிற்கு முன்னுரிமை அளிக்க்கப்பட்டது. மத்திய அரசுக்கு வரவேண்டிய வரி மற்றும் வரி அல்லாத வருவாயை பெருக்குவதற்கு வழி வகை செய்யப்பட்டது. நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதியை 16350 கோடியில் இருந்து 17500 கோடியாக உயர்த்தினார்.
கிராமப்புற வளர்ச்சி
கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயத்தை உயர்த்தும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஆகும் செலவினங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அதனால் விவசாயிகள் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு செலவிடும் தொகை குறைக்கப்படும் என்று தன்னுடைய் பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
உள்நாட்டு உற்பத்தி உயர்வு
நாட்டின் வரி வருவாயை பெருக்கும் வகையில் மற்றொரு வரியான சேவை வரி (Service Tax) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதன் முதலாக 5 சதவிகிமாக சேவை வரியானது அமல்படுத்தப்பட்டது. இதில் தொலைத் தொடர்புத் துறை, காப்பீடு மற்றும் பங்குச் சந்தை தரசு நிறுவனங்கள் சேவை வரி விதிப்பு முறையில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி உயர்வுக்கு சேவை வரியானது 40 சதவிகிதம் வரையில் துணை புரியும் என்று உத்தேசிக்கப்பட்டது.
அனைவருக்கும் கல்வி
நாட்டின் தகவல் மற்றும் தொழில் நுட்ப துறை கடும் சரிவை சந்தித்து வந்த வேளையில், அதனை தூக்கி நிறுத்தும் முயற்சியாக தகவல் தொழில்நுட்ப துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதனால் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியடைந்து ஏற்றுமதி பெருகும் என்றும் அதன்மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அதிகரிக்கும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாடும, வீடு இல்லா ஏழை மக்களுக்கு வீடு மற்றும் அனைவருக்கும் கல்வி, மதிய உணவு திட்டம், அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வழிசெய்ய திட்டம் தீட்டப்பட்டது.
தனிநபர் மற்றும் நிறுவன வருமான வரி விதிப்பில் மாற்றம்
1996 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி வசூலை உயர்த்தும் நோக்கில் தனி நபர் வருமான வரி விதிப்பிலும் நிறுவன வரிவிதிப்பிலும் மாற்றம் கொண்டுவரப்பட்டது. நிறுவன வரிவிதிப்பில் குறைந்த மாற்று வரி (MAT) விதிப்பு முறையும், கறுப்பு பணத்தை வெளியே கொண்டுவரும் நோக்கிலும் VDIS என்னும் திட்டம் கொண்டுவரப்பட்டது.
உட்கட்டமைப்பு நிதி
1998 - 1999 பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி வசூல் மற்றும் உள்கட்டமைப்பு முன்னுரிமை முந்தைய ஆண்டில் கொண்டுவரப்பட்ட தானாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தின் மூலம் (VDIS) சுமார் 10000 கோடி ரூபாய் வசூலானதாக தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் சமூக நல திட்டங்களுக்கும் உள்கட்டமைப்புக்கும் அந்த தொகை செலவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வறுமை ஒழிப்பு
1999 முதல் 2004 வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் யஷ்வந்த் சின்ஹா நிதியமைச்சராக பதவியேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இருபத்தி மூன்று கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சியில் அமர்ந்த தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் அனைவரையும் கவரும் வகையில் வறுமையை ஒழிக்க முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் கூடவே தலைவலியாக இருக்கும் நிதிப் பற்றாக்குறையை போக்குவதற்கும் மனித வள மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
வரி சீர்திருத்தங்கள்
2000-2001 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நலிந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவற்றிற்கு முன்னுரிமை அளிக்கபட்டது. அனைத்து வர்த்தக நடவடிக்கைகளிலும் வெளிப்படைத் தன்மை இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. 2001-2002 பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மற்றும் நிதித் துறையிலும் சீரமைப்பு பணியை முடுக்கிவிடுதல், மற்றும் மானியங்களுக்கு ஆகும் தேவையற்ற செலவினங்களை குறைத்தல், பொதுத்துறை நிறுவனங்களை சீரமைப்பது, வரிச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
வரி விதிப்பு முறையில் மாற்றம்
வரி விதிப்பு முறையில் இரண்டு முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. தவறான பான் எண் விவரங்களுக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பெருநகரங்கள் தவிர்த்து நகரங்களில் உள்ள சினிமா தியேட்டர்களுக்கு வரி விதிப்பு முறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. 2003-04 நிதியாண்டுக்காண பட்ஜெட்டில்
புதிதாக மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஒரு வருடத்திற்கு தனிநபர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு 1 ரூபாய் மட்டும் செலுத்தினால், வருடத்திற்கு 30000 ரூபாய் வரையில் மருத்துவ பயன்பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது
பொது விநியோகத்திட்ட மானியம்
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதால் பெரிதாக ஒன்றும் மாற்றம் செய்யவில்லை. எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த சுமார் 259 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தல் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாடும் இரண்டு கோடி குடும்பங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானியம் வழங்குதல். நீண்டகால மற்றும் நடுத்தர மூலதன வருவாய் இனங்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரியை 10 சதவிகிதமாக குறைத்தல்.
தனிநபர் வருமான வரி வரம்பு நிர்ணயம்
2005 முதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி தொடங்கியது. நாட்டின் வரி வருவாயை பெருக்கும் நோக்கில் தனிநபர் வருமான வரி செலுத்துவதற்கான வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு லட்சம் வரையிலும் வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரையிலும் வருவாய் உள்ளவர்கள் 10சதவிகிமும் இரண்டரை லட்ச வரையில் உள்ளவர்கள் 20 சதவிகிதமும் அதற்கு மேல் வருவாய் உள்ளவர்கள் 30 சதவிகிமும் வருமான வரி செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது அமலில் இருக்கும் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு பற்றிய திட்டம் 2006 - 07 நிதியாண்டில் திட்டமிடப்பட்டது.
வருமான வரி வரம்பு அதிகரிப்பு
தனிநபர்கள் செலுத்தும் வருமான வரி வரம்பான ஒரு லட்சம் ரூபாய் பகுப்பில் பெண்களுக்கான வருமான வரி வரம்பாக 145000 ரூபாயாகவும் மூத்த குடிமக்களின் வருமான வரி வரம்பாக 195000 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. நாட்டில் உள்ள குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அரசுக்கு 60000 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று கணிக்கப்பட்டது.
ஜவஹர்லால் நேரு நகர்புற புணரமைப்பு திட்டம்
நகர்புற வளர்ச்சியை மேம்படுத்தும் முனைப்பில் ஜவஹர்லால் நேரு நகர்புற புணரமைப்பு திட்டத்திற்காக சுமார் 12,887 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் புதிய வீடு கட்டுதல் மற்றும் வீடு சீரமைப்பு பணிகளுக்கு செலவிட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஆண்டு பட்ஜெட்டில் விவசாயத் துறைகளை மீட்டெடுப்பதை இலக்காக கொண்டு திட்டம் தீட்டப்பட்டது. இருந்தாலும் விவசாயத்திற்கு தேவையான இயற்கை உரங்கள் தயாரிப்பதற்கு எந்தவிதமான சலுகைகளும் ஊக்கமும் அளிப்பதற்கு எந்த வரையறையும் தீட்டப்படவில்லை.
மூத்த குடிமக்களுக்கான பென்சன்
சமூக நல மேம்பாட்டுத் திட்டத்திற்கான செலவு 17 சதவிகிதம் உயர்வு. பாரத் நிர்மாண் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 10000 கோடி ரூபாய் அதிகரிப்பு, மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு 24 சதவிகிமும் மருத்துவ மேம்பாட்டிற்கான ஒதுக்கீடு 20 சதவிகிமும் அதிகரிப்பு. மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டத்திற்காக வயது வரம்பு 65ல் இருந்து 60ஆக குறைப்பு
கடன் பெறும் வசதி அதிகரிப்பு
ஏழை மற்றும் விவசாயிகள் கடன் பெறுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை களைந்து விரைந்து கடன் பெறுவதற்கான வழிவகை செய்யப்பட்டது. இதற்கான திட்ட இலக்கு ஒரு லட்சம் கோடியில் இருந்து 5.75 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. மேலும் நிதி சீரமைப்பிற்காக நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தில் (Fiscal Responsibility and Budget Management Act 2003) திருத்தம் கொண்டுவரப்பட்டது.
நிர்பயா திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு
இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டத்திற்கு சுமார் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டு இதற்காக சுமார் 10000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு, ஓடும் பேருந்தில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட நிர்பயா என்ற பெண்ணின் நினைவாக நிர்பயா திட்டத்திற்கு சுமார் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அருண்ஜெட்லி பட்ஜெட்
2014 முதல் இன்று வரை பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெறுகிறது.
பாஜக தலைமையில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வி போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது. சூரிய ஓளி மின் திட்டங்களுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டன. கங்கை நதியை தூய்மை படுத்தும் திட்டத்திற்காக 2037 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சுத்தமான குடிநீர், முழுநேர மின்சாரம்
தேசிய ஜனநாயக முன்னணி அரசின் முழுமையான பட்ஜெட்டாகும். நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் நகர்புறங்களில் உள்ளவர்களுக்கு இரண்டு கோடி பேர்களுக்கும், கிராமப்புற மக்களுக்கு நான்கு கோடிவீடுகளும் கட்டித்தர திட்டம் தீட்டப்பட்டது. மேலும் அனைவருக்கும் சுத்தமான சுகாதாரமான குடிநீர் மற்றும் தங்குதடையின்றி மின்சாரம் கிடைக்க வழி செய்வது.
சுவாச் பாரத் அபியான் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு
நாட்டின் அனைத்து கிராமப் புறங்களையும் தூய்மைப்படுத்தும் முயற்சியாக சுவாச் பாரத் அபியான் என்ற திட்டத்தை தொடங்கி அதற்கு சுமார் 9000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும் 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கு உறதிமொழி எடுக்கப்பட்டது. கறுப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இணைப்பு பட்ஜெட் எப்படி?
2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தி நிலையில் இருந்தபோது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மற்றொரு புதுமையாக முதன்முறையாக ரயில்வே பட்ஜெட்டும் பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது. இயற்கை பேரிடர்களில் இருந்து விவசாயிகளை காப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டது. விவசாயிகளுக்கு 60 நாட்கள் வட்டி இல்லா கடன் வழங்க சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தனிநபர் வருமான வரி செலுத்துவதில் ஐந்து லட்சம் வரையில் 10 சதவிகிதமாக இருந்த வரையறையை 5சதவிகிமாக மாற்றி அமைக்கப்பட்டது. 2018-2019- பிப்ரவரி முதல் தேதி வரையில் காத்திருப்போம்