பட்ஜெட் 2018: மாத சம்பளம் வாங்குவோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா அருண் ஜெட்லி
2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வரி விலக்குக்கான 80சி பிரிவுக்கான உச்ச வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்று மாத சம்பளம் வாங்குவோர் எதிர்பார்க்கின்றனர்.
Recommended Video
டெல்லி: 2018-19ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டில் 80சி பிரிவின் கீழ் வழங்கும் ஒன்றரை லட்சம் என்ற உச்ச வரம்பை இரண்டு லட்சமாகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ அதிகரிக்க வேண்டும் என்பதே மாத சம்பளம் வாங்குபவர்களின் எதிர்பார்ப்பாகும்.
மாத சம்பளம் வாங்குவோரில் மாதந்திர சம்பளம் 30000 ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் தங்களின் வரி சேமிப்புக்காக வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சி யின் படி ஒன்றரை லட்சம் வரையிலும் வரிச் சலுகையை பெற முடியும்.
இதற்காக இவர்கள் வீட்டுக்கடனுக்கான தவணைத் தொகையில் அந்த ஆண்டுக்காக ஒன்றரை லட்சம் வரையிலோ அல்லது வரி விலக்குக்கு உட்படுத்தப்பட்ட பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டிலோ (ELSS Scheme) அல்லது ஆயுள் காப்பீட்டு திட்டத்திலோ தங்களின் பணத்தை முதலீடு செய்ய முடியும்.
80சி பிரிவின் கீழ் வரி விலக்கு
தங்களின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு செலவு செய்த தொகையையும் தங்களின் குழந்தைகளின் படிப்பிற்காக செலவு செய்த தொகையில் 25000 ரூபாய் வரையிலும் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெறமுடியும்.
தேசிய சேமிப்பு திட்டத்திலும், ஐந்து வருட காலத்திற்கான வங்கி சேமிப்பு திட்டத்திலும், தபால் அலுவலக சேமிப்பு திட்டத்திலும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திலும் (Senior Citizens Saving Scheme), பொது சேமநல நிதி திட்டத்திலும் (Public Provident Fund) மாத சம்பளம் வாங்குபவர்கள் வரி விலக்குக்காக 80சி பிரிவின் கீழ் ஒன்றரை லட்சம் வரையில் முதலீடு செய்ய முடியும்.
அதிகரிக்கும் பணவீக்கம்
தற்போது பணவீக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து விலை வாசியும் அதிகரித்து வரும் சூழலில், 80சி பிரிவின் கீழ் ஒன்றரை லட்சம் என்பது மிகவும் குறைவான தொகை என்பது மாத சம்பளம் வாங்கும் அனைவரின் கவலையாகும்.
மத்திய பொத பட்ஜெட்
80சி பிரிவின் கீழ் வரி விலக்குக்காக தற்போது அளிக்கப்பட்டு வரும் ஒன்றரை லட்சம் வரம்பு என்பது கடந்த 2014-15ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிற்து. அதற்கு முன்பு வரையிலும இந்த பிரிவின் கீழ் ஒரு லட்சம் வரையில் மட்டுமே வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 2014ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதன் முறையாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது 80சி பிரிவின் கீழ் ஒரு லட்சமாக இருந்த வரம்பை ஒன்றரை லட்சமாக உயர்த்தினார்.
முழுமையான பட்ஜெட்
அமைச்சர் ஜெட்லி வரும் பிப்ரவரி மாதம் ஐந்தாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதுவே பாரதிய ஜனதா ஆட்சியின் முழுமையான கடைசி பட்ஜெட்டாகும். அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வர உள்ளதால் 2019 பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதில் எந்தவிதமான வரிச் சலுகைகளும் இருக்காது. அதன்பின்பு புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் தான் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
மாத சம்பளம் வாங்குவோர்
ஆகவேதான் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலாவது 80சி பிரிவின் கீழ் வழங்கும் ஒன்றரை லட்சம் என்ற உச்ச வரம்பை இரண்டு லட்சமாகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ அதிகரிக்க வேண்டும் என்பதே மாத சம்பளம் வாங்குபவர்களின் எதிர்பார்ப்பாகும்.
பட்ஜெட்டில் அல்வா
இவர்களின் எதிர்பார்ப்பை நிதி அமைச்சர் பூர்த்தி செய்வாரா அல்லது வழக்கம் போலவே இந்த முறையும் ஒன்றும் இல்லை கையை ஆட்டிவிட்டு அல்வா மட்டுமே கொடுப்பாரா என்பது பிப்ரவரி முதல் தேதியில் தெரிந்துவிடும்.