முறுங்கை விலை கிலோ ரூ.100... தக்காளி கிலோ ரூ.65 - மழையால் விண்ணை எட்டும் காய்கறிகள்
சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக் கிழங்கு கிலோ ரூ.20 என்றும், அவரைக்காய் கிலோ ரூ.60, பீன்ஸ் - ரூ.70, வெண்டக்காய் - ரூ.40, சின்ன வெங்காயம் - ரூ.120, தக்காளி - ரூ.55 என விற்கப்படுகிறது.
கத்தரிக்காய், புடலங்காய், பச்சைமிளகாய், தேங்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
காய்கறி விலை தாறுமாறு
சென்னையில் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ. 65க்கும், முருங்கைக் காய் கிலோ 100க்குட் விற்பனையாகிறது. கேரட் ஒரு கிலோ ரூ. 120, பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 120க்கு விற்பனையாகிறது.
வெங்காயம் விலை
தலைநகர் டெல்லியில் சில்லறை விற்பனையில், வெங்காயம் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.51ஆகவும், தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.80ஆகவும் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் வெங்காயம் விலை சராசரியாக கிலோ ஒன்றுக்கு ரூ.37ஆகவும், தக்காளி விலை சராசரியாக கிலோ ஒன்றுக்கு ரூ.45ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிகள் வரத்து சீராகும்
"இந்த விலையுயர்வு பருவ மாறுபாட்டால் ஏற்பட்டது. இது தற்காலிகமானது. சில வாரங்களில் விலையுயர்வு சரியாகிவிடும் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான். அடுத்த வாரங்களில் புதிய தக்காளி மற்றும் வெங்காயம் வரத்து வந்துவிடும். காய்கறிகள், அரிசி மற்றும் சில பொருட்களின் விலை நிலையாகத்தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
நிலைமை சீராகும்
கடந்த பருவத்தை ஒப்பிடும்போது இந்தப் பருவத்தில் 25 சதவிகிதம் குறைந்த பரப்பிலேயே வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு விலை வீழ்ச்சியே காரணமாகக் கூறப்படுகிறது. மழையால் ஏற்பட்ட போக்குவரத்துத் தடையும் விலையுயர்வுக்கு ஒரு காரணமாகும். அடுத்த பத்து முதல் பதினைந்து நாட்களில் நிலைமை சீராகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.