ஒரு முருங்கைக்காய் 15 ரூபாய்! காய்கறி விலை உயர்வால் கலக்கம்!!
சென்னை: காய்கறிகளின் வரத்து குறைவால், கோயம்பேடு சந்தையில், சில காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது. இதில், ஒரு முருங்கைக்காய், 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கோயம்பேடு சந்தைக்கு, கடந்த சில வாரங்களாக, காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால், குறிப்பிட்ட சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஒரு கிலோ முருங்கைக்காய், 75 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நாட்டு தக்காளி45, பெங்களூரு தக்காளி, அவரை50, கேரட்45, சாம்பார் வெங்காயம்70, பெல்லாரி வெங்காயம்65, ஆந்திரா வெங்காயம்55 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரத்தை விட, இந்த காய்கறிகள் விலை, இருமடங்கு வரை அதிகரித்து உள்ளதால், நேற்று சந்தைக்கு வந்த சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வெங்காயம் விலை
தட்டுப்பாடு காரணமாக, வெங்காயம் விலை, மாநிலம் முழுவதும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து பண்டிகைகள் வருவதாலும், மழைக்காலம் என்பதாலும், அவற்றின் விலை கிலோவுக்கு, 80 ரூபாய் வரை, உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறினர்.
தங்கமான தக்காளி விலை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வரை கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, நேற்று கிலோ, 60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.வெங்காயம் விலைக்கு இணையாக, தக்காளி விலை போட்டிபோட்டு உயர்ந்து வருவது, பொதுமக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தெலுங்கானா போராட்டம்
தமிழகத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், தக்காளி சாகுபடி செய்யப்பட்டாலும், அவை உள்ளூர் தேவைக்கே, போதுமான அளவில் இல்லை. இதனால், தமிழகம் முழுவதுமான, தக்காளி தேவையை பூர்த்தி செய்வதற்கு, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களே கைகொடுத்து வருகின்றன. தெலுங்கானா போராட்டம் காரணமாக ஆந்திர மாநில தக்காளி வரத்து, சென்னைக்கு, குறைந்துள்ளது.
ஒரு முருங்கைக்காய் ரூ.15
மொத்த விலையில், ஒரு கிலோ முருங்கைக்காய், 75 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், சிறு வியாபாரிகள், ஒரு முருங்கைக்காயை, 10 முதல் 15 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.
மழைக்காலத்தில்
புரட்டாசி மாதம் மற்றும் பக்ரீத் பண்டிகை முடிந்துள்ள நிலையில், காய்கறிகளின் திடீர் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும், காய்கறி வழக்கமான அளவு விளைச்சல் இல்லை. அதுவும் விலை உயுர்வுக்கு காரணமாகும்.
தீபாவளி வரை
கோயம்பேடு சந்தைக்கு, கடந்த இரு வாரங்களாக, காய்கறிகளின் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதனால், இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முடியும் வரை, காய்கறி விலை உயர வாய்ப்புள்ளதே தவிர, குறைவதற்கான சாத்தியம் மிக மிகக்குறைவு, என்கின்றனர் மொத்த வியாபாரிகள்.