யாஹூவை 4.8 பில்லியன் டாலருக்கு வாங்குகிறது வெரிசான்!!
நியூயார்க்: பிரபல இணையதள தேடல் பொறியான யாஹூவை அமெரிக்க தகவல் தொடர்பு நிறுவனமான வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 4.83 பில்லியன் டாலர் கொடுத்து வாங்குகிறது.
யாஹூ நிறுவனம், சீனாவின் இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவில் வைத்துள்ள 15 சதவீத பங்கு மற்றும் யாஹூ ஜப்பான் நிறுவனத்தில் உள்ள 35.5 சதவீத பங்கு ஆகியவற்றை தவிர்த்து மற்று பங்குகள் கைமாறுகின்றன.
2017 ம் ஆண்டின் தொடக்கத்தில் நிறுவன கைமாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,400 கோடி டாலர் கொடுத்து வாங்க முன்வந்தது. ஆனால் யாஹூ மறுத்துவிட்டது.
அதேபோல பேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களை வாங்கும் முயற்சியை ஒரு காலத்தில் மேற்கொண்ட யாஹூ நிறுவனம், தற்போது சந்தை வாய்ப்பை இழந்து வெரிசான் நிறுவனம் வாங்கும் அளவுக்கு சுருங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக பல நிறுவனங்கள் யாஹூவை வாங்க முயற்சி வந்த நிலையில் இதில் வெரிசான் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக யாஹூ கடந்த 2005ம் ஆண்டு அலிபாபா நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.