ஜிஎஸ்டி என்றால் என்ன? 8 பாயிண்டுகளில் ஒரு பருந்து பார்வை
டெல்லி: நாடு முழுக்க படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள் மத்தியில், எங்கு பார்த்தாலும், கடந்த இரண்டு நாட்களாக ஜிஎஸ்டி மசோதா பற்றியே பேச்சு.
ஜிஎஸ்டி என்பது மாநில அரசின் வரி விதிப்பை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்ற அளவில் மட்டும் மேம்போக்காக அறியப்பட்டுள்ளது வெகுஜன மக்களால்.
ஜிஎஸ்டி குறித்த மேலதிக விளக்கங்கள் இதோ:
பொருள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) என்றால் என்ன?
பொருள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகியவற்றின் மீது தேசிய அளவில் விதிக்கப்படும் வரிக்கு பெயரே ஜி.எஸ்.டி.
ஜிஎஸ்டி வரி விதிப்பின் நோக்கம் என்ன?
மாநிலங்களுக்கு தக்கபடி மாறும் பல்வேறு வரி விதிப்புகளை அகற்றி, நாடு முழுக்க ஒரே மாதிரியான வரி விதிப்பு நடைமுறையை கொண்டுவருவதே ஜிஎஸ்டி.
ஜிஎஸ்டி எப்படி செயல்படுத்தப்படும்?
ஜிஎஸ்டி என்பதை நுகர்வு அல்லது பயன்பாட்டு வரி என்றும் புரிந்து கொள்ளலாம். எனவே, ஒரு சேவை அல்லது பொருள், நுகர்வோரால் பயன்படுத்தப்படும்வரை இந்த வரியின் கரங்கள் நீளும்.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால், மத்திய அரசுக்கு எவ்வாறு உதவும்?
வரி விதிப்பு என்பது வெளிப்படையானதாக மாறிவிடும், எளிதானதாக இருக்கும். எனவே எந்த பொருளுக்கு வரி விலக்கு உள்ளது, எதற்கு வரி விலக்கு இல்லை என்பது போன்ற தகவல்கள் எளிதாக அனைவருக்கும் புரியும். வரி வசூலுக்கு உதவும். இதனால் அரசின் வருமானம் அதிகரிக்கும்.
ஜிஎஸ்டியால், நிறுவனங்களுக்கு என்ன பயன்?
வரி விலக்கு லாபங்களை பார்த்து அந்த பகுதிகளில் தொழில் தொடங்காமல், தங்கள் தொழிலுக்கு ஏற்ற இடங்களில் நிறுவனங்களை தொடங்க முடியும். நிறுவனங்கள் இடையே ஆரோக்கிய போட்டி அதிகரிக்கும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு விகிதம் எத்தனை சதவீதமாக இருக்கும்?
நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் தலைமையிலான கமிட்டி அரசுக்கு வழங்கிய பரிந்துரைப்படி பார்ப்பதானால், வரி விதிப்பு 17 முதல் 18 சதவீதமாக இருக்க வாய்ப்புள்ளது.
விலைவாசி, வளர்ச்சியில் ஜிஎஸ்டி எந்த மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்?
ஜிஎஸ்டி அமல் காரணமாக பண வீக்கம் அதிகரிக்கும். இதனால் விலைவாசி உயர்ந்தாலும் கூட இது தற்காலிகமானதாகவே இருக்கும். பொது நிதி நிறுவனம், நாட்டின் வளர்ச்சி போன்றவற்றுக்கு ஆரோக்கியம் தரும்.
எந்தெந்த துறைகள், லாபமும், இழப்பையும் சந்திக்கும்?
பண்டகத்துடன் இணைந்த நுகர்வு, சரக்கு போக்குவரத்து, கட்டுமான பொருட்கள் ஆகிய துறைகளுக்கு இது லாபத்தை தரும். எண்ணை, காஸ் போன்ற துறைகளில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். பிற துறைகளில் பெரிய வித்தியாசம் இருக்காது.