கச்சா எண்ணை விலை 75% குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?- பின்னணி தகவல்கள்!
மும்பை: அமெரிக்காவின் சாதனை உற்பத்தி, யூரோ மண்டலத்தில் குறைந்துள்ள தேவை, சீனா, பிரேசில் மற்றும் ஈரானின் வருகை போன்ற பல காரணங்கள் கச்சா எண்ணை விலையை மளமளவென குறைத்துள்ளன. அதேநேரம், இந்தியாவில், வாடிக்கையாளர்களின் கைகளுக்கு வரும்போது, பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லை.
இதற்கான காரணம் என்ன என்ற சந்தேகம் உங்களுக்கு இருப்பின், இப்பதிவு உபயோகமாக இருக்கும். பெரும்பாலானோருக்கு தெரிந்தபடி, வாடிக்கையாளர்கள், விலை குறைவு சலுகையை அனுபவிக்க விடாமல் தடுப்பது மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்புதான்.
எனவேதான், கடந்த 15 மாதங்களில், பெட்ரோல், டீசல் விரை 75 விழுக்காடு குறைந்தபோதிலும், அந்த அளவுக்கோ அல்லது அதன் அருகாமை அளவுக்கோ கூட வாடிக்கையாளர்களுக்கு விலை குறைப்பு பலன் கிடைக்கவில்லை.
11 வருடங்களில் முதல்முறை
உலக அளவில் கச்சா எண்ணை விலை 11 வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதன் பலன் முழுமையாக மக்கள் கைகளுக்கு சென்றுவிடாத அளவுக்கு, சுங்க வரி மற்றும் மதிப்பு கூட்டல் வரிகளை சத்தமில்லாமல் கூட்டியபடியே உள்ளன மத்திய மாநில அரசுகள்.
இறக்குமதி
இந்தியா தனது கச்சா எண்ணை தேவையை பூர்த்தி செய்ய, 80 சதவீதம் அளவுக்கு இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது. எனவே, சர்வதேச அளவில் எண்ணை விலை குறையும்போது, இந்தியாவிலும் அதே அளவுக்கு பெட்ரோலிய பொருட்கள் விலை குறைய வேண்டும் என்பதுதான் நியாயம். ஆனால், இந்திய வாடிக்கையாளர்களோ, சர்வதேச அளவை ஒப்பிட்டால், இரண்டு மடங்கு அதிக பணத்தை செலவிட்டு வருகிறார்கள்.
2014வரை நிலைமை வேறு
2005ம் ஆண்டு தொடங்கி, 2014ம் ஆண்டுவரை, கச்சா எண்ணை விலையைவிட, பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்துவந்தது. மானியங்களை அதிகமாக செலவிட்டு, விலையை குறைத்து வைத்திருந்தது இதற்கு காரணம். ஆனால், கடந்த ஆண்டு முதல் நிலைமை மாறியுள்ளது. கச்சா எண்ணை விலையைவிட பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என்கிறது புள்ளி விவரம்.
டீசல் மீது அநியாய வரி
கடந்த 3 மாதங்களில், சுங்க வரி 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும், டீசல் மீதான வரி இம்மூன்று மாதங்களில் 140 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த புள்ளி விவரத்தை பார்த்தால் அதிர்ச்சி உண்மை உங்களுக்கு தெரியவரும்.
பெட்ரோல் வரியை பாருங்க
கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி, பெட்ரோல் மீதான சுங்கவரி 7.06 என்ற அளவில் இருந்தது. அது டிசம்பர் 16ம் தேதி 7.36 எனவும், இவ்வாண்டு ஜனவரி 1ம் தேதி 7.73 எனவும், ஜனவரி 15ம் தேதி 8.48 என்ற அளவிலும், ஜனவரி 30ம் தேதி 9.48 என்ற அளவுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.
டீசல் நிலை மோசம்
பெட்ரோலைவிட டீசல் பயன்பாட்டாளர்கள் நிலைமை மோசம். கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி, டீசல் மீதான சுங்கவரி 4.66 என்ற அளவில் இருந்தது. ஆனால், டிசம்பர் 16ம் தேதி அது 5.83 என்ற விகிதத்திலும், இவ்வாண்டு ஜனவரி 1ம் தேதி அது 7.83 என்ற அலவிலும், ஜனவரி 15ம் தேதி 9.83 என்ற விகிதத்திலும், ஜனவரி 30ம் தேதி 11.33 என்ற அளவிலும் சுங்கவரி தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது.
விர்ர்..
அதாவது, கடந்த 3 மாதங்களில் பெட்ரோல் மீதான சுங்கவரி 34 சதவீதமும், டீசல் மீதான வரி 140 சதவீதமும் மளமளவென உயர்த்தப்பட்டுள்ளது.
எண்ணை விலையை விட வரி அதிகம்
2014 ஏப்ரலில், கச்சா எண்ணை விலையை விட வரி கட்டணம் குறைவாக இருந்தது. இரண்டையும் சேர்த்து பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. ஆனால், 2015 ஜனவரியில், கச்சா எண்ணைக்கு ஈடாக வரி விதிக்கப்பட்டது.
குறைந்து ஏறியது
2015 ஏப்ரல் மாதத்தில், கச்சா எண்ணை விலையைவிட வரி விதிப்பு கட்டணம் மீண்டும் குறைந்தது. ஆனால், அதன்பிறகோ, இம்மாதம் (பிப்ரவரி) வரை, கச்சா எண்ணை விலையைவிட வரி கட்டணம் அதிகமாகவே இருந்துவருவது அதிர்ச்சி.
டீசலிலும் அதேநிலை
டீசலை பொறுத்தளவில், கடந்த ஆண்டு டிசம்பர் முதல், கச்சா எண்ணை விலையைவிட சுங்கவரி கட்டணம் உயர்ந்து காணப்படுகிறது. அதற்கு முந்தைய காலகட்டம்வரை கச்சா எண்ணை விலைதான் வரி கட்டணத்தைவிட அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எப்படி போகுது பணம்
இப்போதைய நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் அளிக்கும் கட்டணத்தில், 57 சதவீதம் வரியாக அரசுக்கு செல்கிறது. டீசலை பொறுத்தளவில், நாம் செலுத்தும் கட்டணத்தில், 55 சதவீதம் வரியாக அரசுக்கு செல்கிறது. இந்த வரியை தவிர்த்தால், எந்த அளவுக்கு குறைவான விலையில் பெட்ரோல், டீசல் நமக்கு கிடைக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.