அதே சட்டி.. அதே டெக்னிக்.. பிறகு எப்படி தோசை விலை குறையும்?!.. ரகுராம் ராஜன்
கொச்சி: பண வீக்கம் குறைந்தாலும், கூடினாலும் தோசை விலை மட்டுமே குறையவே மாட்டேன் என்கிறதே, அது ஏன் என்று ஒரு மாணவி கேட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சுவாரஸ்யமான விளக்கம் அளித்துள்ளார்.
என்னதான் நடந்தாலும், என்ன மாற்றம் வந்தாலும் தோசை சுடும் முறையில் மாற்றம் வந்துள்ளதா. இல்லையே. அதே முறையில்தானே தோசை சுட்டுக் கொண்டுள்ளோம். பிறகு எப்படி விலை மட்டும் குறையும் என்று கேட்டு கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார் ராஜன்.
கொச்சி வந்த ராஜன் அங்கு நடந்த பெடரல் வங்கி விழாவில் கலந்து கொண்டு பேசியபோதுதான் ஒரு பொறியியல் மாணவி இந்தக் கேள்வியைக் கேட்டார்.
ஏன் குறையவில்லை தோசை விலை?
அந்த மாணவி கேட்கும்போது, நிஜ வாழ்க்கையில் எனக்கு தோசை விலை தொடர்பாக ஒரு சந்தேகம் உள்ளது. பண வீக்கம் அதிகரிக்கும்போது தோசை விலையும் கூடுகிறது. அதேசமயம், பணவீக்கம் குறையும்போது தோசை விலை குறைவதில்லை. ஏன் இப்படி என்று கேட்டார்.
தொழில்நுட்பம் மாற வேண்டும்
அதற்கு ராஜன் பதிலளிக்கையில், உற்பத்தி முறையில் மாற்றம் வராததே முக்கியக் காரணம். உற்பத்தி அதிகரிக்கும்போது அதன் தொழில்நுட்பத்திலும் மாற்றம் வர வேண்டும்.
மற்றவர்கள் மாறுகிறார்கள்
மற்ற துறைகளை பாருங்கள். ஒரு தொழிலில் வளர்ச்சி வரும்போது அங்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் கூடவே வரும். அதை யாரும் நிராகரிக்க முடியாது. அது அவசியமும் கூட. அப்போதுதான் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.
தொழில்நுட்பம் வளர்ந்தால் விலையும் குறையும்
தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் பொருட்களின் தரமும் அதிகரிக்கும். விலையும் குறையும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் தோசை சுடுவதில் என்ன நடக்கிறது.?
அதே சட்டி.. அதே தோசை
ஒரே தொழில்நுட்பம்தான் தோசை சுடுவதில் காலம் காலமாக இருந்து வருகிறது. சட்டியில் மாவை ஊற்றி வட்டமாக இழுத்து தோசை சுடுகிறோம். இத்தனை காலமாக அதில் ஏதாவது மாற்றம் வந்துள்ளதா, இல்லை.
தொழில்நுட்பம் வளரவில்லை
தோசை சுடுவதில் இதுவரை தொழில்நுட்ப வளர்ச்சியே இல்லை. ஒரே தொழில்நுட்பம்தான். சட்டியில் கூட நாம் மாற்றம் செய்யவில்லை. அதேசமயம் தோசை சுடும் ஊழியர்களின் சம்பளம் காலத்திற்கேற்ப உயர்ந்து வந்துள்ளது என்று கூறினார் ராஜன்.