பங்குச்சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 1.75 லட்சம் கோடி இழப்பு
கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சியடைந்து வருகின்றன. கரடியின் ஆட்டம் பார்த்து முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
டெல்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்து வருவதால் இந்திய பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் பெருமளவு வீழ்ச்சியடைந்தது. நேற்றைய தினம் சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்த நிலையில் இன்றும் சரிவடைந்துள்ளது. பங்குச்சந்தைகளில் கரடியின் ஆட்டம் பார்த்து முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு நேற்று மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. நேற்று காலை நேர வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 73.77 ரூபாயாக சரிந்தது. இது வரலாற்றில் இல்லாத சரிவாகும். இதுபோலேவே, ஈரான் கச்சா எண்ணெய் விற்க அமெரிக்கா விதித்துள்ள தடை காரணமாக அதன் விலையும் உயர்ந்து வருகிறது.
கடும் சரிவில் பங்குச்சந்தைகள்
ஆசிய பங்குச்சந்தைகள் கடந்த சில தினங்களாகவே வீழ்ச்சியடைந்து வருகின்றன. இதை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளிலும் வர்த்தகம் பெருமளவு வீழ்ச்சியடைந்தது. நேற்றைய தினம் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்தது. இன்று வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது.
ரூபாய் மதிப்பு சரிவு
ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளைப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது.
இந்திய ரூபாய் மதிப்பு
இந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு நேற்று மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக இன்றும் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. நேற்று காலை நேர வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 43 பைசா அளவுக்கு வீழ்ச்சி கண்டும், 73.70ரூபாயாக சரிந்தது. இது வரலாற்றில் இல்லாத சரிவாகும்.
சென்செக்ஸ், நிப்டி சரிவு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 35 ஆயிரத்து 169 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது. இதுபோலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 200 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 657 புள்ளிகளாக உள்ளது.
பங்குகள் விற்பனை
கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதும், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதாலும், டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது. இதுபோலவே அமெரிக்க வங்கிகளில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து வருகின்றன. இதன் காரணமாக பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்துள்ளன.
கரடியின் ஆட்டம்
நேற்றைய நிலவரப்படி பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்களுக்கு 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்றும் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பங்குச்சந்தைகளில் காளையை வீழ்த்தி கரடியின் ஆட்டம் அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்களின் ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் கொட்டி வருகின்றனர்.