கச்சா எண்ணெய் விலை குறைந்தும் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது ஏன்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், வாட் வரி உயர்த்தப்பட்டதால் தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது
சென்னை: பெட்ரோல் மீதான வாட் வரியினை 27 சதவிகிதத்திலிருந்து 34 சதவிகிதமாகவும் டீசல் மீதான வாட் வரியினை 21.4 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகவும் தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், தமிழகத்தில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது
சென்னையில் இன்று அதிகாலை முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் 74.47 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 62.63 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், அருகில் உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 68.13 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 60.18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய அரசு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை வருகிற ஜூலை மாதம் முதல் அமல்படுத்த உள்ளது. தமிழக அரசு இழப்பை சரிக்கட்ட பெட்ரோல்-டீசலுக்கான வாட் வரியை திடீரென உயர்த்தி உள்ளது.
கச்சா எண்ணெய்
கடந்த ஜனவரி 1ம் தேதி ஒரு பீப்பாய் கச்சா எண்ணை விலையானது கப்பல் போக்குவரத்து செலவுகளையும் உள்ளடக்கி 58.50 டாலராகவும் இந்திய ரூபாய் மதிப்பில் 3,970 ரூபாயாகவும் இருந்தது. அதாவது ஒரு லிட்டர் கச்சா எண்ணையின் அடக்க விலையானது 25 ரூபாய் மட்டுமே.
வரிகள் என்ன?
எண்ணை நிறுவனங்கள் நுழைவு வரி, சுத்திகரிப்பு செலவு, இறக்குவதற்கு ஆகும் செலவு, எண்ணை நிறுவனங்களின் இலாபம் மற்றும் போக்குவரத்து செலவு என்ற வகைகளில் 6.34 ரூபாய் உயர்த்துகின்றன. பின்னர் உற்பத்திக்கு ஆகும் செலவாக கலால் வரி என்ற பெயரில் 21.48 ரூபாய் கூட்டப்பட்டது. இத்துடன் பெட்ரோல் பங்க் உரிமையாளுக்கு கொடுக்கப்படும் கமிஷன் என்ற பெயரில் ஒரு லிட்டருக்கு 2.58 ரூபாய் கூட்டப்பட்டு பின்னர் மதிப்பு கூட்டு வரியாக 15.01 ரூபாய் சேர்த்து ஒரு லிட்டர் 70.60 ரூபாய் என்ற விற்பனை செய்யப்பட்டது.
மார்ச் மாத நிலவரம்
மார்ச் 3ம் தேதி நிலவரப்படி சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணையின் விலை 3,556 ரூபாய், அதாவது ஒரு லிட்டர் கச்சா எண்ணையின் விலை 22.36 ரூபாய் ஆகும்.
இத்துடன் அனைத்து செலவுகளையும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் 68 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 59 ரூபாய்க்கும் விற்கப்படவேண்டும். ஆனால், இன்று தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாயை எட்டியுள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை 63 ரூபாயை எட்டியுள்ளது.
வாட் வரி உயர்வு
பெட்ரோல் மீதான வாட் வரியினை 27 சதவிகிதத்திலிருந்து 34 சதவிகிதமாகவும் டீசல் மீதான வாட் வரியினை 21.4 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகவும் அதிரடியாக உயர்த்தி உள்ளது.
இதனால், சென்னையில் இன்று அதிகாலை முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் 74.47 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 62.63 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதேசமயம், அருகில் உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 68.13 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டீசல் 60.18 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திரும்ப பெற வேண்டும்
இந்த விலை உயர்வானது அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும் என்றும், போக்குவரத்து செலவு அதிகரிக்கும், விலை வாசி மேலும் உயரக்கூடம் என்ற அனைத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. முரளி கூறியுள்ளார். வாட் வரி உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு உயர்த்தியது ஏன்?
மத்திய அரசு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை வருகிற ஜூலை மாதம் முதல் அமல்படுத்த உள்ளது. அனைத்து விதமான வரிவிதிப்புகளும் ஜிஎஸ்டியில் சேர்ந்து விடும். பெட்ரோல்- டீசல் மற்றும் மதுபானம் ஆகியவற்றுக்கான வரி விதிப்பு மட்டும் மாநில அரசு வசம் இருக்கும். எனவே தமிழக அரசு இழப்பை சரிக்கட்ட பெட்ரோல்-டீசலுக்கான வாட் வரியை திடீரென உயர்த்தி உள்ளது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எண்ணெய் நிறுவனங்கள்
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணை நிறுவனங்களுக்கு, இதற்கு முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கியது. இந்த நடைமுறையை தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும் பின்பற்றி வருகிறது. இதனை பயன்படுத்தி எண்ணை நிறுவனங்கள் ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை சர்வதேச கச்சா எண்ணை விலையை மாற்றியமைத்து விற்பனை செய்து வருகின்றன.
ஆட்டோ கட்டணம் உயரும்
பெரும்பாலும் எண்ணை நிறுவனங்கள் கச்சா எண்ணை விலை இறங்கும்போது பெயரளவிற்கு 0.50 பைசா அல்லது 0.60 பைசா என்றும், விலை ஏறும் போது 2 ரூபாய் அல்லது 3 ரூபாய் என்றும் ஒரேயடியாக விலையை உயர்த்தி வருகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் 2 ரூபாய் ஏறினாலே ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டணத்தை 20 ரூபாய் உயர்த்தி விடுவார்கள். இப்போது எவ்வளவு ரூபாய் கூடுதலாக கேட்கப்போகிறார்களோ என்பதுதான் சாமானிய மக்களின் கவலையாக உள்ளது.
வாகன ஓட்டிகளின் கவலை
பெட்ரோல் விலை உயர்வு இருசக்கர வாகன ஓட்டிகளை கவலையடையச் செய்துள்ளது. அதேபோல டீசல் விலை உயர்வு லாரி உரிமையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுக்கும் என்பதால் வாட் வரி உயர்வினை திரும்ப பெற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.