5 ஆண்டுக்குள் இந்தியாவில் கிளைகளை விஸ்தரிக்க வால்மார்ட், ஷாப்பர்ஸ் ஸ்டாப் முடிவு
டெல்லி: இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வால்மார்ட் நிறுவனமும், ஓராண்டுக்குள் ஷாப்பார்ஸ் ஸ்டாப் நிறுவனமும் தங்களுடைய புதிய கிளைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன.
"வால்மார்ட்" இந்தியா நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 பல்பொருள் விற்பனை நிலையங்களை இந்தியாவில் திறக்க திட்டமிட்டுள்ளது.
இங்கு வணிகர்களின் மறுவிற்பனைக்கான பல்வேறு பொருட்கள் மொத்த விலையில் விற்பனை செய்யப்படும். அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான வால்மார்ட் இந்தியா கடந்த ஆண்டு முதல் பார்தி குழுமத்துடன் கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டு தனியே இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் தற்போது நாட்டின் பல நகரங்களில் 20 கடைகளை நடத்தி வருகிறது. ஆக்ராவில் வரும் செப்டம்பரில் 21 ஆவது கடையை திறக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது' என வால்மார்ட் இந்தியா தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிரிஷ் ஐயர் தெரிவித்தார்.
தற்போது ஐந்து இடங்களில் இதே காலத்தில் மேலும் 15 இணைய வர்த்தக கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஏற்கனவே இந்நிறுவனத்தின் இணையம் வாயிலான விற்பனைக்கு ஐந்து கடைகள் உள்ளன. இதே போன்றுஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனமும் 140 கோடி ரூபாய் விரிவாக்கத் திட்டத்தில் அடுத்த ஓராண்டில் 14 விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம் தற்போது 73 கடைகள் வாயிலாக ஆடை , அலங்கார சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.