கூட்டுச்சதி மோசடி குற்றச்சாட்டு: 78 இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி 10 ஆண்டுகள் தடை
லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக சர்வதேச அளவில் உலக வங்கி திட்டங்களை செயல்படுத்தி வந்த இந்திய நிறுவனங்களுக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது.
டெல்லி: உலக வங்கி நிதியில் பல்வேறு நாடுகளில் பல மக்கள் நலமேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் வங்கதேசத்தில் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வந்த ஆலிவ் ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் ஜேய் மோடி ஆகிய நிறுவனங்களுக்கு தடை விதிப்பதாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்கொடையாளர்கள் அளிக்கும் உதவித்தொகை சரியான வகையில் உரிய பயனாளிகளுக்கு சென்று சேர வேண்டும் என்பதாலும், லஞ்ச ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கிலும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
ஆலிவ் ஹெல்த் நிறுவனம் 10 ஆண்டுகள் 6 மாதங்களுக்கும், ஜேய் மோடி நிறுவனத்துக்கு 7 ஆண்டுகள் 6 மாதங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் மொத்தம் 78 நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஏஞ்செலிக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்துக்கு 4 ஆண்டுகள் 6 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனமும் முறைகேடாகவும், ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்கியுள்ளது. இந்நிறுவனம் எத்தியோப்பியா மற்றும் நேபாளத்தில் உலக வங்கி திட்டத்தை செயல் படுத்தி வந்துள்ளது. இதே குற்றச் சாட்டின்கீழ் ஃபேமிலி கேர் என்ற இந்திய நிறுவனமும் நான்கு ஆண்டு களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் அர்ஜென்டீனா மற்றும் வங்கதேசத்தில் உலக வங்கி நிதி உதவி திட்டத்தை செயல்படுத்தி வந்துள்ளது. மதுகான் பிராஜெக்ட்ஸ் லிமிடெட் , ஆர்கேடி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது 18 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் இந்தியாவில் திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளன.
தத்வே குளோபல் என்விரோன்மென்ட் பிரைவேட் லிமிடெட், எஸ்எம்இசி (இந்தியா) பிரைவேட் லிமிடெட், மெக்லியோட்ஸ் பார்மசூடிகல்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு ஓராண்டுக்கும் குறைவாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. 5 நிறுவனங்களுக்கு நிபந்தனை அடிப்படையில் தடைவிதிக் கப்பட்டுள்ளது.
மோசடி, ஊழல், கூட்டு சதி, திட்டப் பணிகளை பிற நிறுவனங்கள் மேற்கொள்ளவிடாமல் தடுப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்பட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மொத்தம் 220 கோடி மதிப்பிலான 390 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.