பெட்ரோல், டீசல் விலை உயர்வால் 4 மாத உச்சத்தில் மொத்த விலை பணவீக்க விகிதம்
மொத்தப் பணவீக்க விகிதம் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவில் 3.18 சதவிகிதத்தை தொட்டுள்ளது.
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதன் எதிரொலியாக மொத்தப் பணவீக்க விகிதமும் கடந்த 4 மாதங்களில் இல்லாத வகையில் 3.18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால், பெட்ரொல், டீசல் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் தாக்கம் மொத்த பணவீக்க விகிதத்திலும் எதிரொலிக்க தொடங்கி உள்ளது நுகர்வோரை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. மொத்தப் பணவீக்க விகிதம் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவில் 3.18 சதவிகிதத்தை தொட்டுள்ளது.
சென்ற 2017-18ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவைவரி என்னும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட கடந்த ஆண்டில் பெரும்பாலான மாதங்களில் மொத்தப் பணவீக்க விகிதம் ஓரளவு கட்டுக்குள் இருந்து வந்தது. நடப்பு 2018-19ம் நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தின் மொத்த பணவீக்க விகிதமானது எப்படி இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
பணவீக்கம் 3.18% ஆக உயர்வு
கடந்த ஏப்ரல் மாதத்திய மொத்தப் பணவீக்க விதிதம் பற்றிய புள்ளி விபரத்தை மத்திய அரசின் புள்ளியியல் துறை இன்று வெளியிடப்பட்டது. இதில் நுகர்வோரை நேரடியாக பாதிக்கும் மொத்தப் பணவீக்க விகிதம் வெளியிடப்பட்டது. கடந்த நான்கு மாதத்தில் இல்லாத அளவில் மொத்தப் பணவீக்க விகிதமானது 3.18 சதவிகிதத்தை தொட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.71 சதவிகிதம் கூடுதலாகும்.
காய்கறிகள் விலை குறைவு
கடந்த மார்ச் மாதத்தில் மொத்தப் பணவீக்க விகிதமானது 2.47 சதவிகிதமாக இருந்துள்ளது. கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால் 0.67 சதவிகிதம் குறைவாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்தப் பணவீக்க விதிமானது 3.85 சதவிகிமாக இருந்தது. காய்கறிகளின் பணவீக்க விகிதமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் தாறுமாறாக விலைகுறைந்து விற்பனையானதால் பணவாட்டம் (Deflation) ஏற்பட்டுள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி
கடந்த மார்ச் மாதத்தில் காய்கறிகளின் பணவீக்க விகிதமானது 2.70 சதவிகிமாக இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் இது சரிவடைந்து 0.89 சதவிகிதமாக குறைந்துள்ளது. காய்கறிகளின் பணவீக்க விகிதமானது கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 0.81 சதவிகிதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எரிபொருள் மற்றும் மின் உற்பத்தியைப் பொருத்தமட்டில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்க விகிதமானது 7.85 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 3.15 சதவிகிதம் கூடுதலாகும்.
பழங்கள் விலை உயர்வு
கடந்த மார்ச் மாதத்தில் எரிபொருள் மற்றும் மின் உற்பத்தித் துறையின் பணவீக்க விகிதமானது 4.70 சதவிகிதமாக இருந்தது. தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததால் ஏப்ரல் மாதத்தில் இத்துறையின் பணவீக்க விகிமானது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பழங்களின் விலை விகிதமானது கடந்த மார்ச் மாதத்தில் 9.26 சதவிகிதமாக இருந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் 100 சதவிகிதம் அதிகரித்து 19.47 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.