ஆமா.. எந்த ஆட்சி வந்தாலும் இந்த விலைவாசி குறையவே மாட்டேங்குதே.. ஏன்னு யோசிச்சீங்களா?
டெல்லி: இந்திய திருநாட்டில் நாளுக்குநாள் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விஷம்போல ஏறிக்கொண்டுதான் உள்ளது. திருவாளர் பொது ஜனங்களும் இதை ஊடகங்களில் பார்த்துவிட்டு, அந்த ஆட்சி போய் இந்த ஆட்சி வந்தாலும் இப்படித்தான் இருக்குப்பா.. என்னத்த செய்ய என்று 'என்னத்த கண்ணய்யாக்களாக' மாறிவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய் விடுகிறார்கள்.
சிலர் மட்டுமே பிரச்சினையின் வேரையும், வேருக்கு பாயும் நீரையும் ஆராய கிளம்புகிறார்கள். நாட்டின் அத்தியாவசிய பிரச்சினையை ஆராயாமல் எந்த நடிகர் படத்தை இன்று இணையத்தில் ஓய்த்துக்கட்டலாம் என்பதில் கவனம் வைப்பது சொந்த காசில் சூனியம் வைப்பதைப்போலத்தான்.
விலைவாசி பற்றி மூட நம்பிக்கைகள்
விலைவாசி உயர்வு குறித்து சில நம்பிக்கைகள் செவி வழி செய்தியாக உலவி வருகிறது. அந்த நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகள் என்பதை பலர் அறிவதில்லை. முதலாவது முக்கிய மூட நம்பிக்கை, மழையில்லைப்பா, பயிரு, பச்சையெல்லாம் வாடிப்போச்சு.. அதான் விலையும் ஏறிப்போச்சு என்று புலம்புவது.
மழை இருந்தும் விலை உயர்ந்ததே...
இந்தியாவில் 2006ம் ஆண்டு முதல் விலை வாசி உயர்வு கிராப், ராக்கெட் போல ஏறுமுகமாகவேதான் இருக்கிறது. இடைப்பட்ட எந்த ஆண்டிலும் மழையே பெய்யாமல் போய்விட்டதா என்ன! சொல்லப்போனால் இந்த ஆண்டுகளில் இந்தியாவில் நல்ல மழை பெய்துள்ளது. அப்படியும் விலைவாசி ஏறிக்கொண்டே இருந்ததே ஏன்?
அதான்... அதேதான்
மூட நம்பிக்கையில் மற்றொன்று, சர்வதேச அளவில் பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. "இப்போ உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் இதெல்லாம் கொண்டு வந்தாங்க பாத்தீங்களா.. ஆங்.. அதான்.. அதேதான் இதுக்கெல்லாம் காரணம்" என்று டீக்கடை பண்டிதர்கள், பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டே பன்னாட்டு சந்தை நிலவரத்தை அவிழ்த்துவிடுவார்கள். ஒருவேளை அதான்.. அதேதான் காரணமாக இருக்குமோ? இல்லை என்கிறார்கள் பீட்சா சாப்பிடும் பன்னாட்டு பொருளாதார மேதைகள். ஏனெனில் உலக அளவில் 2007-08ம் ஆண்டுகளில் விலைவாசி உயர்ந்திருந்ததாம். அதன்பிறகு எல்லாம் சுமுகமாகத்தான் உள்ளதாம்.
அப்படி இருக்குமோ..
இப்போ கண்டுபிடிச்சிட்டேன்.... இடைத்தரகர். அவங்களாளத்தான் இது எல்லாம். கொள்ளை லாபத்தை சுவாஹா செய்வது அவர்கள்தான். பாவம் விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள் என்று, யாராவது நினைத்தால், மூட நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று என்று சொல்வதில் எந்த அவநம்பிக்கையும் தேவையில்லை.
அப்படி இல்லியாமே..
எப்போது வியாபாரம் என்று ஒன்று ஆரம்பித்ததோ அப்போதே, உற்பத்தியாளர்-நுகர்வோர் நடுவே இடைத்தரகர்களும் வந்துவிட்டனர். முன்னைவிட இப்போது விவசாயிகள், நுகர்வோர் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், இடைத்தரகர்கள் லாபத்தை கூட்டிக்கொண்டே சென்றால் மாட்டிக்கொள்வார்கள்.
பணப்புழக்கமா.. அப்படீன்னா!
அதாகப்பட்டது.. பொருளாதாரத்தின் தந்தை ஆடம்ஸ்மித் என்ன சொல்றாருன்னா... மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்துவிட்டால், விலைவாசியும் கூடிப்போயிடும் அப்படீன்னு சொல்லிட்டு போயிட்டாருங்க. ஆனா இங்க நிலைமை அப்படியா இருக்கு. மக்களில் பலர் சிங்கிள் டீக்கு லாட்டரி அடித்தாலும், விலைவாசி மட்டும் ஜாக்குவார் காரில் போகுதே. உதாரணத்துக்கு 2012-13ம் நிதியாண்டில், 11.9 சதவீதமாகவும், 2013-14ல் 12.4 சதவீதமாகவும் விலைவாசி உயர்வு கணக்கிடப்பட்டுள்ளது.
தக்காளி... இன்னாதாய்யா காரணம்?
அப்படீன்னா, 'தக்காளி....' தக்காளி, தயிர் வெங்காயம் விலை உயர்வுக்கு என்னதான் காரணம் என்ற கேள்வி எழுவது நியாயம்தான். திட்ட குழு முன்னாள் உறுப்பினர் அபிஜித் சென் போன்ற பொருளாதார மேதைகள் சுட்டிக்காண்பிக்கும் திசையில் எட்டிப்பார்த்தால் வேறு ஒரு கோணத்தில் விலைவாசி உயர்வை அணுக முடியும்.
நெல்லுக்கு செலவு அதிகரிப்பு
விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் விலை உயர்ந்துள்ளது முதலாவது முக்கிய காரணம். 2009-10 மற்றும் 2013-14க்கு இடைப்பட்ட காலத்தில், நெல் விளைவிக்கும் செலவு மட்டும் 17.6 சதவீதம் அதிகரித்துள்ளது. பயிரை விளைவிப்பதில் விதை, உரம் போன்றவற்றை தவிர பணியாளர்களுக்கு அளிக்கும் ஊதியம் மட்டும், 30 சதவீத பங்கை வகிக்கிறது. அந்த பணியாளர்கள் ஊதியம் அதிகரித்துக்கொண்டே செல்வது விலைவாசியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கூலி கூடிப்போச்சாம்பா..
2007-08 மற்றும் 2011-12க்கு இடைப்பட்ட காலத்தில், பணியாளர்கள் ஊதியம் ஆண்டுக்கு சராசரியாக 6.8 சதவீதம் அதிகரித்துக்கொண்டு வந்துள்ளது. வெள்ளை காலர் வேலை பார்ப்பவர்களுக்கான ஊதிய உயர்வை விட இது குறைவாக இருக்கலாம். ஆனால் உணவு விலையில் அதன் தாக்கம் அளப்பறியது.
ஊரக வேலை வாய்ப்பு காரணமா?
மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் காரணமாகவே, கூலித்தொழிலாளர்கள் சம்பளத்தை அதிகரித்து கேட்க தொடங்கியுள்ளனர் என்ற வாதமும் சரியில்லை என்கின்றனர் குலாதி போன்ற பொருளாதார வல்லுநர்கள். ஏனெனில் இத்திட்டத்தை சரியாக செயல்படுத்தாத மாநிலங்களிலும் விவசாய கூலித்தொழிலாளர் ஊதியம் அதரித்துதான் வந்துள்ளதாம்.
நிலத்தை வித்துபுட்டீங்களே...
விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாற்றப்படுவது விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சென் கூறுகிறார். நகர பகுதிகளை சுற்றிலும் விவசாய நிலம் அழிக்கப்பட்டுவிட்டது. சராசரியாக 150 கிலோமீட்டர் தூரத்தில் இருந்துதான் காய்கறிகள் நகரங்களுக்கு வருகின்றன. டீசல் போன்ற உள்ளீடுகளின் விலையேற்றத்தால் போக்குவரத்து சாதனங்களுக்கு அதிக கட்டணம் தர வேண்டியுள்ளது. இதுதான் விலையேற்றத்துக்கு காரணம் என்கின்றார். அப்படின்னா, விலைவாசியை குறைக்க முடியாதா... ?