திறமை குறைவு... 2500 பேருக்கு எஸ் வங்கி கல்தா - அதிர்ச்சியில் ஊழியர்கள்
இந்தியாவில் வங்கித் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பணித் திறமை ஆண்டுதோறும் குறைந்துவருகின்றது என்று எஸ் வங்கியானது தன்னுடைய ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
மும்பை: திறமை குறைவு காரணமாக சுமார் 10 சதவிகித அடிமட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எஸ் வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது ஊழியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
வருவாய் வீழ்ச்சி, உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் திறமை குறைவு, அதிநவீனமயமாக்கல் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் போன்ற காரணங்களினால் உலகளவில் பெரும்பாலான தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
அதேபோல், தனியார் துறை வங்கிகளும் தங்களின் ஊழியர்களை திறமை குறைவு என்ற காரணத்தை கூறி பணி நீக்கம் செய்து வருகின்றன. இதில் முதலில் பணி நீக்க நடவடிக்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது எச்டிஎஃப்சி
எச்டிஎஃப்சி வங்கி
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி ஆகும். இந்த வங்கி மேல் மட்ட அளவில் சுமார் 11000 ஊழியர்களை வயது அதிகரிப்பு மற்றும் குறைந்து வரும் பணித் திறமை போன்ற காரணங்களினால் பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது.
எஸ் வங்கி
இந்த வரிசையில், தற்போது பிரபல தனியார் துறை வங்கியான எஸ் வங்கியும் இணைந்துள்ளது. எஸ் வங்கியானது, தங்களின் ஊழியர்களில் திறமை குறைவு மற்றும் அதிநவீனமயமாக்கல் என்ற காரணத்தை முன்னிட்டு சுமார் 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
பதவி உயர்வு
இது பற்றி எஸ் வங்கியின் உயர் அதிகாரிகள் தரப்பில் கூறியபோது, எங்கள் வங்கியானது, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கீழ்மட்டத்தில் உள்ள பணியாளர்களின் திறமையை அவர்கள் மேற்கொண்ட பணியின் அடிப்படையில் அளவீடு செய்கிறது. அதன் அடிப்படையில் தகுதி மற்றும் திறமையானவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் பதவி உயர்வு அளித்துவருகிறது.
திறமை குறைவு
ஆனால், அதே சமயத்தில் திறமை குறைவு கண்டறியப்பட்டால், அவர்களை பாரபட்சம் இன்றி பணி நீக்கமும் செய்து வருகின்றது. இது வழக்கமான ஒரு நடவடிக்கையாகும். இவை அனைத்தும் பெரும்பாலான தனியார் துறை வங்கிகளிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையாகும் என்றனர்.
எஸ் வங்கி ஆண்டறிக்கை
இந்தியாவில் வங்கித் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பணித் திறமை ஆண்டுதோறும் குறைந்துவருகின்றது என்று எஸ் வங்கியானது தன்னுடைய ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரூ. 966 கோடி இலாபம்
எஸ் வங்கியானது நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 966 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளது. கடந்த நிதியான்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது இது சுமார் 32 சதவிகிதம் அதிகமாகும்.
நாடு முழுவதும் கிளைகள்
எஸ் வங்கியானது தற்போது நாடு முழுவதும் 1020 கிளைகளைக் கொண்டுள்ளது. இது மேலும் 800 கிளைகளை நாடு முழுவதும் துவக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.