உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் நல்ல இருக்கா? வீட்டுக்கடன் ஈஸியா கிடைக்கும்!
வீட்டுக்கடன் வாங்க நினைப்பவர்கள் சிபில் அளவுகோல் 700க்கும் கூடுதலாக மதிப்பெண்களை வைத்திருந்தால் ஈஸியாக லோன் கிடைக்கும்.
பெங்களூரு: வீட்டுக்கடன் வாங்குவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் நம்மிடம் இருந்தாலும் அடிப்படை வரம்புத் தொகை இருந்தாலும், நன்மதிப்பு என்னும் கிரெடிட் ஸ்கோர் இருந்தால் சுலபமாக வீட்டுக்கடன் வாங்கிவிடலாம்.
வாடகை வீட்டில் குடியிருக்கும் அனைவருக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு கண்டிப்பாக இருக்கும். அதுபோலவே மாதச் சம்பளதாரர்களில் பெரும்பாலானவர்களுக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். வீட்டுக்கடன் வாங்கத் துடிக்கும் அனைவரிடமும் தேவையான ஆவணங்கள் இருந்தாலும், அடிப்படை வரம்புத் தொகை கையிருப்பில் இருந்தாலும் அவ்வளவு எளிதில் கடன் கிடைத்து விடாது.
வீட்டுக்கடன் வாங்குவதற்கு என்று சில அடிப்படைத் தகுதிகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று சிபில்(CIBIL) மதிப்பெண் என்னும் கடன் பெறுவதற்குறிய தகுதியாகும். முறையாக கடன் தொகையை திரும்பச் செலுத்தும் நபர்களுக்கு சிறப்புச் சலுகையாக வட்டி விகிதத்தில் தள்ளுபடியும் வழங்க பொதுத்துறை நிறுவனங்கள் முன் முன்வந்துள்ளன.
லோன் வாங்க போறீங்களா?
வீட்டுக்கடன் வாங்க விரும்பும் நபர், இதற்கு முன்பு ஏதேனும் தனிநபர் கடன், நகைக் கடன், கடன் அட்டையின் மூலம் பெற்ற கடன் மற்றும் இன்னும் பிற கடன்களை வாங்கி இருந்தால், வாங்கிய கடன் தொகைக்கு செலுத்தவேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை மாதந்தோறும், தவணை தேதியில் முறையாக செலுத்திய இருக்க வேண்டும்.
கடன் வாங்கும் தகுதி
கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையை முறையாக செலுத்தத் தவறும் பட்சத்தில், கடன் வாங்கியவரின் நன்மதிப்பு என்ற தகுதி குறைந்துவிடும். இதற்கான அளவுகோலை சிபில் (CIBIL) நிறுவனம் முறையாக ஆராய்ந்து மதிப்பெண் அளிக்கும். சிபில் என்பது கடன் வாங்கியவரின் தகுதியையும், அவர் ஏற்கனவே வாங்கிய கடன்களை எவ்வாறு திரும்ப செலுத்தினார் அல்லது எவ்வாறு செலுத்தி வருகிறார் என்றும், இனிமேல் வாங்கப்போகும் கடனை எவ்வாறு திரும்பச் செலுத்துவார் என்ற வரலாறு முறையாக ஆராய்ந்து அளவீடு செய்து மதிப்பீடு செய்யும் நிறுவனமாகும்.
வீட்டுக்கடன் ஈஸி
கடன் வாங்கியவர், கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையையோ அல்லது முழு கடன் தொகையையும் எந்தவிதமான காலதாமதமும் இல்லாமல் திரும்பச் செலுத்துவது மிகமிக அவசியமாகும். அவ்வாறு முறையாக செலுத்தி இருந்தால் மட்டுமே வீட்டுக்கடன் தொகையை மிக விரைவாக பெறமுடியும். அதற்கு சிபில் மதிப்பெண் குறைந்தபட்சம் 700 மதிப்பெண்களுக்கும் கூடுதலாக இருக்கவேண்டியது மிக அவசியமாகும்.
நிதி நிறுவனங்கள் அறிக்கை
சில தனியார் நிதி நிறுவனங்களும், வீட்டுக்கடன் வசதி நிறுவனங்களும், கடன் கேட்கும் விண்ணப்பதாரர்களின் முழு விபரங்களையும் அலசி ஆராயந்து விரிவான அறிக்கை அளிக்கும்படி சிபில் நிறுவனத்தினை கேட்டுக்கொண்டுள்ளன. சிபில் நிறுவனமும் விண்ணப்பதாரரின் முழு விபரத்தையும், கூடவே அவருடைய தொலைபேசி கட்டணம் மற்றும் மின் கட்டணம் போன்றவற்றை முறையாக செலுத்தி உள்ளாரா? என்பதையும் முழுமையாக ஆராயந்து சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு அறிக்கை அளிக்கிறது. கடன் வழங்கும் நிறுவனங்களும் சிபில் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்தே கடன் வழங்குவது பற்றி முடிவெடுக்கும்.
மானியம் கிடைக்கும்
கூடுதலாக சிபில் மதிப்பெண்களை வைத்திருக்கும் நபர்களுக்கு வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும், வீட்டுவசதி நிறுவனங்களும் விரைவாகவும் தாமாக முன்வந்து வீட்டுக்கடன் வழங்க முன்வரும். கூடவே சிறப்புச் சலுகையாக வீட்டுக்கடனுக்கான வட்டியிலும் குறிப்பிட்ட சதவிகிதத்தை தள்ளுபடி செய்யவும் முன்வரும். அப்படி இல்லாத நபர்களுக்கு வீட்டுக்கடன் கிடைப்பதிலும் கால தாமதம் ஏற்படும். கூடுதல் சுமையாக கடனுக்கான வட்டி விகிதத்தையும் உயர்த்தும்.
நல்ல மதிப்பெண்கள் முக்கியம்
பொதுத் துறை வங்கிகளான பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா மற்றும் ஐடிபிஐ வங்கியும் முறையாக கடன் தொகையை திரும்பச் செலுத்தும் நபர்களுக்கு வீட்டுக்கடன் வழங்குவதில் முன்னுரிமை அளித்து வருகின்றன. மேலும் அவர்களுக்கு சிறப்புச் சலுகையாக வட்டி விகிதத்தில் தள்ளுபடியும் வழங்க முன்வந்துள்ளன. வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் சிறப்புப் சலுகைகள் பற்றி கருத்து தெரிவித்த சிபில் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஹர்ஷலா சந்தோர்கர், இது வாடிக்கையாளர்களை மேலும் கவர்ந்து இழுத்து கடன் வாங்கத் தூண்டுவதற்கு உதவுவதாகும். கேரட் அண்டு ஸ்டிக் (Carrot and stick) என்ற அடிப்படையில் ஆசையை தூண்டுவதாகும். இதன் மூலம் வங்கிகளின் வருவாயும் அதிகரிக்கும். கூடவே மோசமான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு கடன் வழங்கவதையும் தவிர்க்க முடியும், என்றார். வீட்டுக்கடன் வாங்கத் துடிக்கும் அனைவரும் சிபில் அளவுகோல் 700க்கும் கூடுதலாக மதிப்பெண்களை வைத்திருக்குமாறு தங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது.