சொந்த வீடு, நிலம் வாங்கப்போறீங்களா? இபிஎஃப் பணம் 90% எடுத்துக்கலாம்...
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (இபிஎஃப்) வீடு, நிலம் வாங்க 90 சதவிகித தொகையை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: பணியாளர்கள் தங்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து (இபிஎஃப்) வீடு, நிலம் வாங்க 90 சதவிகித தொகையை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இ.பி.எஃப். திட்டத்தில் சேமிப்பு செய்து வந்த உறுப்பினர்கள் வீடு வாங்கவோ அல்லது மனை வங்கவோ 90 சதவிகித தொகையினை எடுத்துக் கொள்ளலாம். இந்த அறிக்கை அனைத்து இபிஎப். அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
கடன் தொகையை முழுவதுமோ அல்லது பகுதியளவிலோ மாதத் தவணையாக செலுத்த தங்களது பிஎஃப். தொகையை பயன்படுத்தவும் இத்திட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சொந்த வீடு கனவு
மத்திய வர்க்கத்தினர், மாத சம்பளதாரர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பெரும் கனவு. என்னதால் லோன் போட்டு வீடு வாங்க நினைத்தாலும் பலருக்கும் அது கை கூடாமல் உள்ளது. மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா'என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
அனைவருக்கும் வீடு
இந்தத் திட்டத்தின் கீழ், இரண்டு கோடிக்கும் அதிகமான வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் அடிப்படையில் நடுத்தரவர்க்கத்தினருக்கு உதவிடும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
மாத சம்பளதாரர்கள்
மாதச் சம்பளக்காரர்களுக்கு உதவிடும் வகையில் இபிஎஃப் நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, ஐந்து ஆண்டுகள் பி.ஃஎப். பணம் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்கள் 36 மாத பிஎஃப் தொகையை வீடு வாங்குவதற்காக எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது. வீடு கட்ட நிலம் வாங்குவதற்கு 24 மாத பிஎஃப் சேமிப்பைப் பெற்றுகொள்ளும் வசதியும் இருந்தது.
பணம் பெறுவது எப்படி?
தற்போது, 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் வீடு வாங்குவதற்கு, தங்களின் இபிஎஃப் பணத்திலிருந்து 90 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தொகையை எடுக்க, சில கட்டுப்பாடுகளை இபிஎஃப் அலுவலகம் விதித்துள்ளது. அதன்படி, இபிஎஃப் பயனாளர்கள் 10 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டுறவுச் சங்கம் உருவாக்க வேண்டும். அந்தச் சங்கம் முறைப்படி பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் இபிஎஃப் கணக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் பிடித்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் இபிஎஃப் நிறுவனமே நிலம் வாங்குபவர்களிடம் அல்லது ஃபிளாட் வாங்குபவர்களிடம் நேரடியாகப் பணத்தைச் செலுத்தும் என்று ஏப்ரல் 12ஆம் தேதி மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டெபாசிட் செய்ய வேண்டும்
மேலும் இதற்காக கொடுக்கப்பட்ட பணத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக இபிஎஃப் உறுப்பினர்களுக்கு வீடு கட்டி முடிக்கப்படவில்லையென்றாலோ, குறிப்பிட்ட மனை ஒதுக்கப்படாவிட்டாலோ இபிஎஃப். சேமிப்பிலிருந்து இதற்காக எடுக்கப்பட்ட தொகை மீண்டும் 15 நாட்களுக்குள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரதமரின் கனவுத் திட்டம்
2022ல் அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் கனவுத்திட்டத்தின் முதல் படி இதுவாகும் என்று மத்திய தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார். இதன் மூலம் 4 கோடி இபிஎஃப். உறுப்பினர்கள் பயனடைவர் என்றும் கூறியுள்ளார்.