'அச்சே தின்'...! வருமான வரி கட்டுவோருக்கு காஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டம்
டெல்லி: பணக்காரர்களுக்கு, காஸ் மானியம் வழங்குவதை ரத்து செய்யும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருவாய் உள்ளவர்களின் பட்டியலையும் தயாரித்து வருகிறது. இதன் மூலம் சுமார் ஒரு கோடி பேருக்கு காஸ் மானியம் ரத்தாகும் என்று கூறப்படுகிறது. இது நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு மானியங்களை வழங்கி வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் மிக முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கமுடியவில்லை என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.
வங்கிக்கு மானியம்
இந்நிலையில், காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியுள்ளது. தலையை சுற்றி மூக்கை தொடும் இந்த நடைமுறை மக்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணியுள்ளது.
மார்ச் வரை கெடு
காஸ் சிலிண்டர் பயனாளிகள் தங்களது வங்கி கணக்கு எண்ணை காஸ் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதற்கான கெடு கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்து விட்டபோதிலும், வரும் மார்ச் மாதம் வரை இந்த கெடு நீடிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், காஸ் சிலிண்டருக்காக வாடிக்கையாளர்கள் புக் செய்தால், வங்கி ஆவணம் தரப்படும்வரை சிலிண்டர் சப்ளை செய்யப்படுவதில்லை.
வங்கி கணக்கில் 9 கோடி
இதுவரை 60 சதவீத பயனாளிகளுக்கு காஸ் மானியத் தொகை வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது. நாடு முழுவதும் மொத்த காஸ் இணைப்பு வைத்து இருப்பவர்கள் 15 கோடி பேர். இதில் 9.35 கோடி பேர் நேரடி காஸ் மானியத்தில் இணைந்துள்ளனர். இவர்களுக்கு ரூ.7,931.73 கோடி மானியம் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி பெயர்களில் காஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் கணிசமாக வருவாய் கிடைத்துள்ளது.
வசதியானவர்களுக்கு மானியம் இல்லையாம்
இதற்கிடையே, வங்கியில் பணம் போடும் முறையையும் நைசாக ரத்து செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. வசதியானவர்கள் என்று முத்திரை குத்தி சமூகத்தின் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு தீவிரம் காட்ட உள்ளது. அதாவது, வருமான வரி செலுத்துபவர்களுக்கு சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
1 கோடி பேருக்கு பாதிப்பு
இதற்காக, குறிப்பிட்ட வருவாய் உள்ளவர்களின் பட்டியலையும் மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். இதன் மூலம் சுமார் ஒரு கோடி பேருக்கு சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியம் ரத்தாகும் என்று மத்திய நிதி அமைச்சக மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சக வட்டாரங்களும் சுட்டி காட்டின.
பட்ஜெட்டில் அறிவிப்பு
இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பிப்ரவரி மாதம் 28ம் தேதி மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அறிவிப்பார் என்றும் நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். அச்சே தின் (நல்ல காலம்) வருகிறது என்று மோடி பிரதமரானதும் அறிவித்தார். ஆனால், காஸ் சிலிண்டரை முழு விலை கொடுத்து வாங்க சொன்னால், நடுத்தர வர்க்கத்தினருக்கு அச்சே தின்னாக அது இருக்க போவதில்லை, அய்யய்யோ தினமாகத்தான் இருக்கும்.