ஹரியானாவில் ஷாக்: ஒரே பள்ளியில் 54 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு!
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் ஒரே பள்ளியில் 54 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பள்ளியின் விடுதி கட்டிடம் சீல் வைக்கப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அக்டோபர் வரை கொரோனா பேயாட்டம் போட்டது. அதன் பிறகு கொஞ்சம் ஓய்வு எடுத்தது. ஆனால் தற்போது கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் அச்சுறுத்தும் பாதிப்புகள் இல்லை. ஆனால் கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொடர்ந்து ஆட்டம் போட்டு வருகிறது.
குறிப்பாக கேரளா, மகாராஷ்டிராவில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.இந்தியாவில் 15,000-க்குள் இருந்த பாதிப்புகள் மீண்டும் 15,000-க்கு மேல் பதிவாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்கள் தடுப்பூசியை மக்களுக்கு விரைந்து செலுத்துமாறும், நோய் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துமாறும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் ஒரே பள்ளியில் 54 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானாவில் கர்னாலில் உள்ள ஒரு பள்ளியில்முதலில் 3 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர் 54 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யபட்டது.இதனை தொடர்ந்து அந்த பள்ளியின் விடுதி கட்டிடம் சீல் வைக்கப்பட்டு ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.