அரியானாவில் கடுமையான பனிமூட்டம்… ஒரே நேரத்தில் 50 வாகனங்கள் மோதி விபத்து.. 7 பேர் பலி
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பகல் நேரத்திலும் கடுமையான பனிமூட்டம் காணப்படுவதால், விபத்தை தவிர்ப்பதற்காக, வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சாலையில் வாகனங்களை இயக்குகின்றனர்.
இந்நிலையில், அரியானா மாநிலத்தில், ரோஹ்தக் - ரேவாரி தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டத்தால், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
முன்னால் சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கியதை அறியாமல், பின்னால் வந்த வாகனங்களும் அதிவேகமாக ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.
தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் கவலைக்கிடமான முறையில் இருப்பதால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.