ஆளுக்கொரு சோபாவில் படுத்துக் கொண்டு.. விடிய விடிய.. சட்டசபையைக் கலக்கிய எம்எல்ஏக்கள்!
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் விடிய விடிய நடத்திய உள்ளிருப்புப் போராட்டம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து பஞ்சாபில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபையில் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
முதல்வர் அமரிந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, பாஜகவின் விவசாய சட்டத்திற்கு எதிராக மாநில அளவிலான சட்ட மசோதா ஒன்றை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதன் நகல் வரைவு இதுவரை எம்எல்ஏக்களுக்கு அளிக்கப்படாமல் உள்ளது. இதை எதிர்த்துத்தான் இந்த உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.
சட்டசபை வளாகத்தில் சோபாக்களை இழுத்துப் போட்டு ஆளுக்கொரு சோபாவில் படுத்துக் கொண்டு இரவு முழுவதும் இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் எம்எல்ஏக்கள் ஈடுபட்டனர். எம்எல்ஏக்கள் கூறுகையில் முதலில் அமரிந்தர் சிங் அரசு வரைவு நகலை அனைத்து உறுப்பினர்களுக்கும் அளிக்க வேண்டும். சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும். விவாதத்திற்குப் பின்னர் உரிய திருத்தங்களுடன் அதை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நாங்கள் அமரிந்தர் சிங் அரசின் மசோதாவை ஆதரிப்போம், நிச்சயம் எதிர்க்க மாட்டோம். ஆனால் எங்களுக்கு நகல் மசோதா தேவை. அதை கொடுக்குமாறு கேட்டும் கொடுக்காமல் உள்ளனர். இது முக்கியப் பிரச்சினை. இதில் எம்எல்ஏக்கள் விவாதிப்பதில் என்ன தவறு இருக்க முடியும். எனவே நகல் மசோதா மீது விவாதம் நடத்தாமல் மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றுவதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள்.
பீகார் முதல் கட்ட வாக்குப் பதிவு: 30% வேட்பாளர்கள் மீது கொலை, கொள்ளை, பலாத்கார வழக்குகள்!
மத்திய அரசு சமீபத்தில் 3 விவசாய மசோதாக்களை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதையடுத்து இதை சட்டமாக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் உத்தரவிட்டார் என்பது நினைவிருக்கலாம். இந்த சட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வெடித்தது. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில்தான் போராட்டம் தொடர்கிறது. இந்த சட்டங்களை எதிர்த்து பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருந்து வந்த சிரோமணி அகாலிதளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியதும் நினைவிருக்கலாம்.