தனிக் கட்சி துவங்குகிறார் கேப்டன் அமரீந்தர் சிங்.. பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டம்
சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் தனிக் கட்சியை விரைவில் தொடங்க உள்ளதாக அறிவித்தார். மேலும் 2022 மாநிலத் தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
அமரீந்தர் சிங் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் ட்விட்டர் பதிவுகளில் இதுகுறித்து கூறியிருப்பதாவது.
"பஞ்சாப் எதிர்காலத்துக்கான போர் தொடங்கிவிட்டது. பஞ்சாப் மக்கள் நலனுக்காகவும் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஓராண்டுக்கும் மேல் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்காகவும் செயல்பட எனது புதிய கட்சியைத் தொடங்குவது பற்றி விரைவில் அறிவிப்பேன்.
ஆபரேஷன் தாமரை.. பாஜகவுடன் கூட்டணியா?.. அமித்ஷாவை மீண்டும் சந்திக்கிறாரா அமரீந்தர் சிங்.. பரபர டெல்லி
விவசாயிகள் நலன்
விவசாயிகள் நலனுக்காக அவர்களது போராட்டத்துக்குத் தீர்வு கண்டால் 2022 சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படலாம். பஞ்சாப் மற்றும் பஞ்சாப் மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வரை நான் ஓயமாட்டேன். அரசியல் நிலைத்தன்மையும், உள் மற்றும் வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதும் தான் பஞ்சாபுக்கு இப்போது தேவை. அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்தையும் செய்வேன் என்று, பஞ்சாப் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்." இவ்வாறு அமரிந்தர் சிங் கருத்தை ரவீன் துக்ரல் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் பதவி
பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கை ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, சரன்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சித்துவுடன் மோதல்
காங்கிரஸ் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜிநாமா செய்யும் நிலை உருவாகியிருந்தது. பின்னர் சித்துவும் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
அமித் ஷாவுடன் சந்திப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அமரிந்தர் சிங் ஏற்கனவே சந்திப்புகளை நடத்தி இருக்கிறார். அப்போது அமரீந்தர் சிங், தனிக் கட்சி துவங்குவது பற்றியும் பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் சட்டசபை தேர்தல்
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் விவசாயிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் எனவே பாஜகவுக்கு செல்வாக்கு குறைந்து விட்டது. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடையே அங்கு போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அமரிந்தர் சிங் தனிக் கட்சி தொடங்கி பாஜக வுடன் கூட்டணி வைத்தால் ஆட்சியை பிடிப்பதற்கு வாய்ப்பு இருக்கும் என்று பாஜக நினைக்கிறது. ஆனால் அது நடக்குமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.