ஈகோ.. சச்சின் பைலட் வேண்டாம்! அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் "கலகம்"! ராஜஸ்தானில் என்ன நடக்கிறது?
சண்டிகர்: திருவிழாவில் ஐஸ் கிரீமிற்கு அடம்பிடிக்கும் சின்ன குழந்தை ஐஸ் கிரீமை சாப்பிட்டுவிட்டு.. பின்னர் ரிமோட் காரும் கேட்டு அடம் பிடிப்பது போலத்தான் அசோக் கெலாட் ராஜஸ்தானில் அடம் பிடித்துக்கொண்டு இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ள அவர்.. ராஜஸ்தான் முதல்வர் பதவியிலும் தனது ஆளே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவர் ஆதரவாளர்கள் சச்சின் பைலட்டுக்கு எதிராக களமிறங்கி உள்ளதால் மீண்டும் ராஜஸ்தானில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்படுவது இது மூன்றாவது முறை. அங்கு தேர்தலுக்கு பின் யார் முதல்வர் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது ராகுல் இருவரிடமும் பேசி.. கடைசியில்.. அசோக் கெலாட் கையை தூக்கி அவரை முதல்வராக்கினார்.
அடுத்து மீண்டும் ஒன்றரை வருடத்தில் அங்கு உட்கட்சி மோதல் வந்த நிலையில், அசோக் கெலாட் தனது ஆதரவாளர்களுடன் தனியாக பேசி வந்தார். எங்கே மத்திய பிரதேசம் போல ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்று அஞ்சிய காங்கிரஸ், சச்சின் பைலட்டை அழைத்து அடுத்த முறை நீங்கள்தான் முதல்வர் என்று கூறி அவரை சமாதானம் செய்தது.
இந்த நிலையில்தான் காங்கிரஸ் தேசிய தலைவருக்கான தேர்தல் வர உள்ளது.
40 ஆண்டு காலம் பதவியில் இருக்கேன்.. புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கனும்.. அசோக் கெலாட் பரபர
தலைவர் தேர்தல்
இந்த முறை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட உள்ளார். அதேபோல் அவரை எதிர்த்து திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் போட்டியிட உள்ளார். அக்டோபர் 17ம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற இருக்கிறது. 71 வயது நிரம்பிய மூத்த தலைவரான அசோக் கெலாட், சோனியா ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன நடக்கும்?
அசோக் கெலாட் தலைவராகும் பட்சத்தில் சச்சின் பைலட் ராஜஸ்தான் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்குத்தான் அசோக் கெலாட் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியில் ஒரு தலைவருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளது. இதை ராகுல் காந்தியும் நேற்று குறிப்பிட்டு பேசி இருந்தார். இதனால் கண்டிப்பாக அசோக் கெலாட் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசோக் கெலாட்.. இரண்டு பதவியையும் நான் பார்க்கிறேன்.. இல்லையென்றால்.. என்னுடைய ஆள்தான் ராஜஸ்தான் முதல்வராக வேண்டும் என்று நிலைப்பாடு எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இரண்டும் வேண்டும்
ராஜஸ்தான் அரசியலில் தன்னுடைய கிரிப் போய்விட கூடாது என்பதால் அவர் சச்சின் பைலட்டுக்கு எதிராக இப்படி காய் நகர்த்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான் சட்டசபையில் 107 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 90 எம்எல்ஏக்கள் அசோக் கெலாட் பக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சச்சின் பைலட்டை முதல்வராக்கினால் நாங்கள் ராஜினாமா செய்துவிடுவோம் என்று இவர்கள் கூறியதாக தெரிகிறது. நேற்று இது தொடர்பாக அசோக் கெலாட் ஆதரவாளர்கள் சபாநாயகர், மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்தித்து பேசி உள்ளனர்.
ஆலோசனை
அதில் அசோக் கெலாட்டை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்ல கூடாது. அப்படி அவர் செய்தால் நாங்கள் ராஜினாமா செய்து ஆட்சியை கவிழ்த்துவிடுவோம். காங்கிரஸ் விதிகளில் இதற்காக மாற்றம் செய்ய வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் இந்த எதிர்ப்பிற்கு நான் காரணம் அல்ல., என்னுடைய ஆதரவாளர்கள் இப்படி செய்கிறார்கள். அவர்களை நான் கட்டுப்படுத்தவில்லை என்று அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார்.
சச்சின்
இதுவரை நடந்த நிகழ்வுகளில் சச்சின் பைலட் மிகவும் அமைதியாகவே இருக்கிறார். அவர் பெரிதாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவருக்கு முன்பே கொடுத்த வாக்குறுதிகள் அடிப்படையில், அவரைத்தான் முதல்வராக்க வேண்டும் என்று சோனியா, ராகுல் காந்தி கருதுவதாக தெரிகிறது. ஆனால் அசோக் கெலாட்டிற்கு இருக்கும் ஈகோ காரணமாக அவர் சச்சின் பைலட்டை எதிர்த்து வருகிறார் என்று கருதப்படுகிறது. ராஜஸ்தானில் என்ன நடக்கும்.. அசோக் கெலாட் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆவாரா? ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.