இழுபறி முடிவுக்கு வந்தது.. ஹரியானாவில் பாஜக-ஜேஜேபி கூட்டணி ஆட்சி.. துணை முதல்வராகிறார் துஷ்யந்த்
சண்டிகர்: ஹரியானா அரசியல் குழப்பம் தீர்ந்தது. ஜனநாயக் ஜனதா கட்சியுடன்-பாஜக கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதல்வராகவும், ஜனநாயக் ஜனதா கட்சியின் துஷ்யந்த் சவுத்தாலா துணை முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளனர்.
ஹரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவால் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளில்தான் வெல்ல முடிந்தது. காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. புதிதாக உருவான, ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வென்று அசத்தியது. அதேபோல் சுயேட்சைகள் 7 இடங்களில் வென்றனர். ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்களாவது தேவை என்பதால் இழுபறி நிலை நீடித்தது.
சுயேச்சைகள் ஆதரவோடு ஆட்சியமைக்க பாஜக முதலில் முடிவெடுத்தது. ஆனால், சுயேச்சைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹரியானா லோகித் என்ற கட்சியின் தலைவரும், இந்த தேர்தலில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான, கோபால் கந்தா, தனக்கு அமைச்சர் பதவி தந்தால், சுயேச்சைகளை பாஜகவுக்கு ஆதரவு அளிக்கச் செய்வதாக கூறினார்.
ஆனால் கோபால் கந்தா, ஏற்கனவே விமான பணிப்பெண் மற்றும், அவர் தாயார் மரண விவகாரத்தில் தொடர்புள்ளவர் என்று குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பதால், அவரது ஆதரவை ஏற்க கூடாது என்று பாஜகவில் எதிர்ப்பு குரல் எழுந்தது. மூத்த தலைவர் உமா பாரதி இதை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
இதையடுத்து, துஷ்யந்த் சவுத்தாலாவுடன், பாஜக தலைவர் அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஒப்புதல் ஏற்பட்டது.
நீண்ட நிர்வாக அனுபவம்.. காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் முதல் துணை நிலை ஆளுநர்கள் பின்னணி!
இதுகுறித்து அமித்ஷா அளித்த பேட்டி: நாளை இரு கட்சிகளும் ஹரியானாவில் அரசு அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கும். மனோகர் லால் கட்டர் ஹரியானா முதல்வராகவும், துஷ்யந்த் சவுதலா மாநில துணை முதல்வராகவும் இருப்பார்.
மனோகர் லால் கட்டார்: ஹரியானா மாநிலத்தில் அரசு அமைப்பதற்கான முடிவையடுத்து, நாளையே, நாங்கள் ஆளுநரை சண்டிகரில் சந்திக்க உள்ளோம்.
துஷ்யந்த் சவுத்தாலா: ஹரியானாவுக்கு ஒரு நிலையான அரசை, வழங்க பாஜக மற்றும் ஜே.ஜே.பி ஒன்று சேருவது முக்கியம். அமித் ஷா மற்றும் நட்டா ஆகியோருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக ஒரு நிலையான அரசாங்கத்தை அமைப்பது முக்கியம் என்று எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது.
இவ்வாறு தலைவர்கள் பேட்டியளித்தனர்.