வழிநடத்திய பெரியார் கொள்கை.. ஸ்டாலினை பின்பற்றி மக்கள் சேவை! சொல்வது பஞ்சாப் பாஜக வேட்பாளர் ஜக்மோகன்
ஜக்மோகன் சிங் ராஜு பஞ்சாப் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
சண்டிகர்: விருப்ப ஓய்வு பெற்ற நாளிலேயே, பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார் ஜக்மோகன் சிங் ராஜூ.. இவரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, பஞ்சாப் மாநிலத்தில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. என்ன காரணம்?
பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.. முழுக்க முழுக்க விவசாயிகளை நம்பி, காங்கிரசும், பாஜகவும், ஆம் ஆத்மியும் களத்தில் குதித்துள்ளனர்.
இந்த முறை பஞ்சாப்பை கைப்பற்றியாக வேண்டும் என்று பாஜக முனைப்பு காட்டி வருகிறது.. அந்த வகையில் வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து வருகிறது..
முதல் நாள் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு பெற்றவர்.. மறுநாள் பாஜக வேட்பாளர்.. பஞ்சாப் தேர்தலில் அதகளம்
வேட்பாளர்கள்
அதில், அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் ஜக்மோகன் சிங்க ராஜூ போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்துள்ளது.. அது தொடர்பான அறிக்கையும் வெளியிட்டுள்ளது.. பாஜகவின் வேட்பாளர் லிஸ்ட்டில் எத்தனையோ பேர் இடம்பெற்றிருந்தாலும், இந்த வேட்பாளர் மட்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறார்.. அதற்கு 2 காரணங்கள் உள்ளன.
2 காரணங்கள்
முதலாவதாக, இதே அமிர்தசரஸ் தொகுதியில்தான், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ஏற்கெனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்... இப்போது சித்துவுக்கு போட்டியாக ஜக்மாகன் சிங்கை பாஜக நிறுத்தி உள்ளது, அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது... இரண்டாவதாக, ஜக்மோகன் சிங் ராஜுவுக்கும் தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
பணிகள்
டெல்லியில் உள்ள தமிழக அரசின் பணிகள் அனைத்தையும் முன்னின்று கவனித்து வந்தவர் இந்த ஜக்மோகன் சிங் ராஜு தான்.. டெல்லியில் உள்ள 2 தமிழ்நாடு இல்லங்களை நிர்வகிப்பது, தமிழக அரசு ஒன்றிய அரசுடன் தொடர்பு கொண்டு ஒன்றிய அரசின் திட்டங்கள் தொடர்பான பணிகள், நிதி ஒதுக்கீடு தொடர்பான பணிகள் அனைத்திலும் முக்கிய பங்கு வகித்து வந்தவரும் இவரேதான்.. அதாவது, முதன்மை செயலாளருக்கு இணையாக கூடுதல் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் பணியாற்றி வந்தார்.
பரபரப்பு
இந்நிலையில் இவர் திடீரென விருப்ப ஓய்வு வேண்டும் என்று கேட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்கும் சமீபத்தில் விண்ணப்பித்திருந்தார். இவர் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு வருடத்துக்கு மேல் காலம் உள்ள நிலையில், திடீரென ஏன் விருப்ப ஓய்வு பெற வேண்டும் என்ற பரபரப்பு தொற்றி கொண்டது.. நேற்று விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், இன்றைய தினம் பஞ்சாப் தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.. அதுவும் சித்துவை எதிர்த்து போட்டியிடுகிறார்..
விருப்ப ஓய்வு
ஒருவேளை இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு தான், அவ்வளவு அவசரமாக விருப்ப ஓய்வு பெற்றாரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இத்தனை நாட்களும், தமிழக அரசு பணிகள் தொடர்பான ஒன்றிய அரசுடன் நடைபெறும் அனைத்து கருத்து பரிமாற்றங்கள், ஆலோசனைகள் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தவர் ஜக்மோகன் சிங் ராஜு, பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது..
கடிதம்
அதுமட்டுமல்ல, தன்னுடைய விருப்ப ஓய்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.. அதில், "என் சொந்த மாநிலத்தின் வேதனை நிறைந்த சூழ்நிலை என் மனசாட்சியை உலுக்குகிறது.. தாய் மண்ணை நேசிக்கும் ஒரு மகன், என் மாநிலத்துக்கு ஏதாவது செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளேன்" என்று அதில் உருக்கமாக கூறியிருந்தார்.
ஓய்வு
பொதுவாக, ஒரு ஐஏஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தால், குறைந்தது 3 மாதங்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்பது விதிமுறை.. ஆனால், ஜக்மோகன் சிங் ராஜூவுக்காக அந்த விதியை தளர்த்தப்பப்பட்டு உடனடி ஓய்வு கொடுக்கப்பட்டுவிட்டது.. நேற்று மாலைதான் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.. ஆனால், அடுத்த கொஞ்ச நேரத்திலேயே அமிர்தசரஸ் வேட்பாளராக பாஜக அவரை அறிவித்துவிட்டது.
சுயமரியாதை
இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், பாஜக அறிவித்துள்ள இந்த வேட்பாளர், பெரியாரின் விசுவாசி என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்.. இதை ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவரே சிலாகித்து சொல்லி உள்ளார்.. 20 வருஷங்களுக்கு மேலாக தமிழகத்தில் அதிகாரியாக பணியாற்றிவிட்டேன்.. பெரியாரின் போதனைகள் முதல் சுயமரியாதை வரலாறு வரை தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது..
பெரியார்
விருப்ப ஓய்வு வேண்டி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்திலும், "பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்தபோது, எனது மனசாட்சியே கலங்கியது என்று தெரிவித்திருந்தேன்... மக்களுக்கு சேவை செய்வதில் ஸ்டாலினின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற உள்ளேன்.. என்னுடைய வாழ்க்கை முழுவதும் சீக்கிய குருக்களின் போதனைகளாலும், பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் 'பெரியார்' ஈ.வெ. ராமசாமி கொள்கைகளாலும் வழிநடத்தப்பட்டுள்ளது" என்று பூரித்து போய் சொல்கிறார்.
அம்பேத்கர்
பெரியார், அம்பேத்கார், முக ஸ்டாலின்.. போன்ற பெயர்களை நெகிழச்சியுடன் குறிப்பிட்டு, பஞ்சாப்பில் களமிறங்க புறப்பட்டுள்ளார் பாஜகவின் இந்த வித்தியாசமான வேட்பாளர் ஜக்மோகன் சிங்..