பாஜகவை சிங்கிளாக தூக்கியடித்த "சிங்"கம்.. ஹரியானாவில் காங்கிரஸ் அபார வெற்றி!
சண்டிகர்: நாட்டின் பிற பகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜக அமோக முன்னிலை அல்லது வெற்றி பெற்றிருக்கலாம்.. ஆனால் ஹரியானாவில் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, செய்த செம மூவ்களால் காங்கிரஸ் வெற்றியை ருசித்துள்ளது.
காங்கிரஸ் ஆளும் ஹரியானா மாநிலத்தில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, பரோடா தொகுதியில் (ஹரியானாவிலுள்ள பரோடா), காங்கிரஸ் சீனியர் தலைவர் கிருஷான் ஹூடா போட்டியிட்டு வென்றார். அவர் தொடர்ந்து 3வது முறையாக அந்த தொகுதியை கைப்பற்றியிருந்தார்.
பாஜக சார்பில் எதிர்த்து போட்டியிட்ட குத்துச் சண்டை வீரரான யோகேஷ்வர் தத் தோல்வியடைந்தார்.
டிஆர்எஸ்சின் இரும்பு கோட்டை.. உள்ளே புகுந்து கொடி நாட்டிய பாஜக.. அப்படியே ஆடிப்போன சந்திரசேகர ராவ்
காங்கிரஸ் வெற்றி
இந்த நிலையில்தான், கடந்த ஏப்ரல் மாதம், கிருஷான் ஹூடா, மரணமடைந்தார். இதையடுத்து, நவம்பர் 3ம் தேதி அந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் இந்துராஜ் நர்வால் களமிறங்கினார். பாஜக சார்பில் யோகேஷ்வர் தத் மறுபடி போட்டியிட்டார். ஆனால் 9,200 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வென்றது.
வாக்குகளை இழந்த பாஜக
காங்கிரஸ் கட்சிக்கு 57,400 வாக்குகள் கிடைத்தன, கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்ததை விட கிட்டத்தட்ட இது 15,000 வாக்குகள் அதிகம். 2019 ல் காங்கிரஸ் 42,500 வாக்குகளைப் பெற்றது, பாஜக 37,700 வாக்குகளையும், ஜேஜேபி வேட்பாளர் 32,500 வாக்குகளையும் பெற்றனர். இருப்பினும், இந்த முறை, பாஜக-ஜேஜேபி கூட்டணி போட்டும் 48,000 வாக்குகளைத்தான், யோகேஷ்வர் தத் பெற முடிந்தது.
விவசாய சட்டங்கள்
பாஜக-ஜேஜேபி கூட்டணி, இந்த தேர்தலில் கிட்டத்தட்ட 22,000 வாக்குகளை இழந்துள்ளது. விவசாய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இதற்கு ஹரியானாவில் விவசாயிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா இப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தார். இந்த போராட்டத்திற்கு பிறகு நடந்த தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ஜாதி அரசியல்
ஜாட் ஜாதி அல்லாத வேட்பாளரை ஜாட் ஜாதியினர் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியில் நிறுத்தி வெற்றிபெற வைக்க முயன்ற பாஜக வியூகம் தவிடுபொடியாகியுள்ளது. ஏனெனில் யோகேஷ்வர் தத் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். அவரால் ஜாட் வாக்குகளை ஈர்க்க முடியவில்லை.
திடீர் திருப்பம்
பரோடாவிலிருந்து போட்டியிட காங்கிரசின் டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாஜகவில் இருந்து, கபூர் சிங் நர்வால், சில மாதங்களுக்கு முன்பு காங்கிரசில் சேர்ந்தார். அவர் பரோடாவிலிருந்து காங்கிரஸ் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று மிகவும் நம்பினார்.
இருப்பினும், கபூருக்கு சீட் பெற்றுத்தர ஹூடா எவ்வளவோ முயன்றும், காங்கிரஸ் தலைமை அவருக்கு டிக்கெட் கொடுக்கவில்லை.
பூபிந்தர் சிங் ஹூடா சூப்பர்
எனவே கபூர் சுயேச்சையாக போட்டியிட முடிவெடுத்தார். ஆனால், முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, கபூர் சிங் நர்வாலிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். எனவேதான் அவர் சமாதானமடைந்து, சுயேச்சையாக களமிறங்கவில்லை. இதனால் பாஜகவால் வாக்குகளை சிதற வைக்க முடியவில்லை. எனவே ஹரியானாவில் சிங் இஸ் கிங் என்கிறார்கள் ஆதரவாளர்கள்.