தமிழகத்து கலாச்சாரம், சாப்பாடு பிடிக்காது.. பாகிஸ்தான் சூப்பர்.. நவ்ஜோத் சிங் சித்து ஷாக் பேச்சு
சண்டீகர்: தமிழகத்தை விட பாகிஸ்தான்தான் தனக்கு நெருக்கமாக உணருவதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கூறியதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
பாஜகவில் இணைந்து எம்.பி.யானவர் நவ்ஜோத் சிங் சித்து. ஆனால், 2 வருடங்கள் முன்பாக அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார். இப்போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசில், கலாச்சார துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேச்சை உதிர்த்துள்ளார்.
தமிழகத்தில் வாழ முடியாது
இமாசலபிரதேச மாநிலம் கசாலிநகரில் நடந்த இலக்கிய விழாவில் கலந்து கொண்ட சித்து பேசியதை பாருங்கள்: நான் தமிழகம் சென்றால், அங்குள்ள மக்கள் பேசும் தமிழ் மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியாது. வணக்கம் என்ற வார்த்தை மட்டுமே புரியும். அந்த மாநில மக்களின் உணவுப் பழக்கமும் எனக்கு பிடிக்காது. தென் இந்திய உணவுகளையும், தமிழக உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட முடியாது. தமிழக கலாச்சாரம் எங்கள் கலாசாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு நான் சென்றால், அங்கு மக்கள் பஞ்சாபி பேசுகிறார்கள். பஞ்சாபில் இருக்கும் கலாசாரமே, பாகிஸ்தானில் இருக்கிறது.
பாகிஸ்தானிலுள்ள மக்களுடன் சேர்ந்து வாழ்வதில் எந்தவிதமான கஷ்டமும் இல்லை. கலாச்சாரமும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது. இது மிகவும் வியப்பான விஷயமாக உள்ளது. இவ்வாறு சித்து பேசினார். இந்த பேச்சுக்கு பல மட்டங்களில் இருந்தும் கண்டனம் வலுத்துள்ளது.
பாகிஸ்தான் அமைச்சராகலாம்
இந்த நிலையில் பாஜக செய்தி தொடர்பாளர் சம்பத் பத்ரா இது குறித்து டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தான் மீது மிகவும் பற்றுள்ளவராக சித்து இருப்பதால் பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து விலகி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமைச்சரவையில் சேர்ந்து கொள்ளலாம். அதுதான் அவருக்கு எங்களுடைய கனிவான அறிவுரையாகும். சித்து தனது பேச்சில் தென் இந்தியாவை விட பாகிஸ்தான் உயர்ந்தது எனது தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுடன் இணைந்து சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது. நாட்டை தென் இந்தியா, வட இந்தியா என்று பிரிப்பதே காங்கிரசின் சதி திட்டமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக கண்டனம்
அதிமுக செய்தித்தொடர்பாளர் முரளிதரன் சிவலிங்கம் கூறுகையில், பாகிஸ்தான் அதிகமாக பிடித்திருந்தால், சித்து பாகிஸ்தானுக்கே போகட்டும். அவரது பேச்சை சீரியசாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. சித்து ஒரு காமெடியன். பாஜகவில் இருந்தபோது சோனியா காந்தியை தரக்குறைவாக பேசினார், ஆனால் இப்போது சோனியா காலில் விழுகிறார் என்றார்.
பாகிஸ்தான் பாசம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றபோது அந்த நாட்டு ராணுவ தளபதியை கட்டித் தழுவி சர்ச்சையில் சிக்கியவர் நவ்ஜோத் சிங் சித்து என்பது குறிப்பிடத்தக்கது.