ராபர்ட் வதேராவுக்கு செக்? நில மோசடி வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஹூடா வீட்டில் சிபிஐ ரெய்டு
சண்டிகர்: ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ ரெய்டு நடந்து வருகிறது.
நில மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ ரெய்டு நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹரியானா மாநிலத்தில் 2005 முதல் 2014 வரை பூபிந்தர்சிங் ஹூடா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அந்தக் கால கட்டத்தில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா உள்ளிட்டவர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் விதிமீறல் நடந்ததாக புகார் கூறப்பட்டது.
சிஹி, சிக்கந்தர் பூர்படா, சிகோபூர் ஆகிய கிராமங்களில் நிலங்களுக்கு பட்டா வழங்கியதிலும், வீட்டு பயன்பாட்டு உரிமம், வர்த்தக உரிமம் வழங்கப்பட்டதிலும் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
ராபர்ட் வதேராவுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், அரசு நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்று முறைகேடு செய்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இதுதொடர்பாக சிபிஐ இதுவரை ஹூடாவுக்கு எதிராக 3 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்தநிலையில்தான், சிபிஐ இன்று, ஹூடா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.
A team of CBI officials is present at the residence of former Haryana Chief Minister BS Hooda in Rohtak, Haryana. pic.twitter.com/HwPB5TtvVz
— ANI (@ANI) January 25, 2019
இதனிடையே, அரசியல் பழிவாங்கும் போக்கில் ரெய்டுகள் நடப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ராபர்ட் வதேரா மனைவி, பிரியங்கா காந்தி, அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள நேரத்தில் அவருக்கு செக் வைக்கும் விதமாக இந்த ரெய்டு நடப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.