உலக கோப்பையை இந்தியா வென்றால் 10 நாட்களுக்கு இலவச பயணம்.. ஆட்டோ ஓட்டுநரின் அசத்தல் ஆஃபர்!
சண்டீகர்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 10 நாட்களுக்கு இலவச ஆட்டோ பயணம் வழங்குவதாக ஓட்டுநர் ஒருவர் அறிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் இறுதியில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில் அரையிறுதி போட்டிக்கு இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இதில் இந்தியா, நியூஸிலாந்து போட்டி நேற்று நடைபெற்றது.
அப்போது நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே நின்று போனது. இதனால் இந்த போட்டி இன்றும் தொடர்கிறது.
யார் மோதல்
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே இறுதி போட்டிக்கு தகுதி பெறும். அது போல் இந்த அணியுடன் நாளை நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளில் எது வெற்றி பெறுகிறதோ அந்த அணியே இறுதிப் போட்டியில் மோதும்.
இலவச ஆட்டோ பயணம்
இந்த நிலையில் உலக கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் வேண்டுதல் ஆகும். இந்த நிலையில் சண்டீகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அசத்தல் ஆஃபர் வழங்கியுள்ளார். அதாவது உலக கோப்பையை இந்தியா வெற்றி பெற்றால் 10 நாட்களுக்கு அனைத்து தரப்பினருக்கும் இலவச ஆட்டோ பயணம்.
அனில்குமார்
நமது நாட்டுக்காக இதை செய்கிறேன். இந்த உலக கோப்பையுடன் கிரிக்கெட் வீரர் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் அவர் உலக கோப்பையுடன் விடை பெற வேண்டும் என நினைக்கிறேன் என அனில்குமார் தெரிவித்தார்.
ஆட்டோ பயணம்
இது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர். அப்போதும் சண்டீகர் மக்களுக்கு தொடர்ந்து ஒரு மாதத்துக்கு இலவச ஆட்டோ பயணத்தை வழங்கினார் அனில்குமார்.