பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு.. ட்விஸ்ட்..!
சண்டிகர்: இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் அடுத்தாண்டு மட்டும் மொத்தம் 7 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் 6 மாநிலங்களில் பாஜகவே ஆளும் கட்சியாக உள்ளது.
முதல் பரிசு குக்கர்; 2-ம் பரிசு ஹாட் பாக்ஸ்; 3-ம் பரிசு டிபன் பாக்ஸ்; வாங்க... வந்து ஊசி போடுங்க..!
அதேநேரம் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அங்குப் பல மாதங்களாகவே உட்கட்சி பூசல் இருந்து வந்தது.
அமரீந்தர் சிங் ராஜினாமா
கடந்த 4 ஆண்டுகளாகப் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் அமரீந்தர் சிங். உட்கட்சி பூசல் காரணமாக அமரீந்தர் சிங் நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த பஞ்சாப் முதல்வர் பதவிக்குப் பலரது பெயர்களும் அடிப்பட்டன. குறிப்பாகக் காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ சுக்ஜிந்தர் சிங் முதல்வராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய முதல்வராக சரண்ஜித் சிங்
இந்தச் சூழலில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி, அமரீந்தர் சிங் அமைச்சரவையில் மாநில தொழில்நுட்ப கல்வித் துறை அமைச்சராக உள்ளவர். அடுத்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், இது மிக முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பஞ்சாப் மக்கள்தொகையில் சுமார் 33% தலித்துகள் ஆவர்.
வாழ்த்து
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங்கிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங், புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங்கிற்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக ராஜினாமா செய்த சமயத்தில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய அமரீந்தர் சிங், தான் ஒருமுறை அல்ல மொத்தம் மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சுக்ஜிந்தர் சிங்
முதலில் மூத்த காங்கிரஸ் எம்எல்ஏ சுக்ஜிந்தர் சிங்கே முதல்வராகத் தேர்வு செய்யப்படுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், யாரும் எதிர்பார்க்காத வகையில் சரண்ஜித் சிங் முதல்வராக அறிவிக்கப்பட்டார். இது குறித்து சுக்ஜிந்தர் சிங் கூறுகையில், "கட்சித் தலைமை எடுத்த முடிவில் எனக்கு முழு மகிழ்ச்சி தான். என்னை ஆதரித்த அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரண்ஜித் சிங் எனது சகோதரர் போன்றவர். அவருக்கு நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
பஞ்சாப் குழப்பம்
கடந்த 2017ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் இருந்தே நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அமரீந்தர் சிங்கிற்கும் இடையே மோதல் இருந்தது. அப்போது அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பு காரணமாக நவ்ஜோத் சிங் சித்து துணை முதல்வராக அறிவிக்கப்படவில்லை. அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட போதிலும், 2 ஆண்டுகளில் அதை அவர் ராஜினாமா செய்தார். இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் இடையே மோதல் மீண்டும் உச்சம் பெற்றது. குறிப்பாக நேற்று முன்தினம் 80 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 50 பேர் அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனச் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர். அதன் பின்னரே அவரை காங்கிரஸ் தலைமை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது.