பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அபாரம்.. 7மாநகராட்சியையும் கைப்பற்றியது.. பாஜகவுக்கு பலத்த அடி
சண்டிகர்: பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் அபாரமாக வெற்றி பெற்றும், முன்னிலை வகித்தும் வருகிறது.
அங்குள்ள 7 மாநகராட்சிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று கைப்பற்றி அசத்தியுள்ளது.
நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் பல இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றும், முன்னிலை வகித்தும் வருகிறது.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 70 நாளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது.ஆனால் இதில் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.
பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள்தான் அதிகளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பஞ்சாபில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் இந்த தேர்தலில் நன்கு எதிரொலித்துள்ளது.
5 மாநகராட்சியை கைப்பற்றியது
வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்க தொடங்கியது. அங்குள்ள 7 மாநகராட்சிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று கைப்பற்றி அசத்தியுள்ளது. அதாவது மோகா, ஹோஷியார்பூர், கபுர்தலா, அபோஹர் , பதீண்டா , பதான்கோட் மற்றும் படாலா ஆகிய 7 மாநகராட்சிகளையும் காங்கிரஸ் வென்றுள்ளது.
வெற்றி வாகை சூடிய காங்கிரஸ்
மேலும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் பல இடங்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியும், முன்னிலை வகித்தும் வருகிறது. பத்னி கலன், பானூர், பர்னாலா என அனைத்தும் நகராட்சி பகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் செல்கிறது. மற்றோரு கட்சியான சிரோமணி அகாலி தளமும் பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்று 2-வது கட்சியாக திகழ்கிறது.
பாஜக நிலைமை பாவம்
ஆனால் பாஜக நிலைமைதான் ரொம்ப மோசமாக உள்ளது. பல இடங்களில் பாஜக கடைசி இடத்துக்கு சென்று பெரும் சரிவை சந்தித்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாகவே தேர்தலில் பாஜக வீழ்ச்சியடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.