மதுபானம், கஞ்சா கடைகளை திறக்க ம.பி. அரசு அனுமதி! பஞ்சாப் அரசு சரக்குகளை டோர்டெலிவரி செய்ய ஏற்பாடு!
போபால்/ சண்டிகர்: மத்திய பிரதேசத்தில் மதுபானம் மற்றும் கஞ்சா விற்பனை கடைகளை இன்று முதல் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப்பில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே சென்று மதுபானங்களை விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மேலும் 14 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
இதனால் நாடு முழுவதும் மாநிலங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 40 நாட்களாக மூடப்பட்டிருந்த மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் நாள்தோறும் இந்த கடைகள் முன்பு கூட்டம் அலைமோதுகிறது.
பல மணிநேரம் நீண்ட வரிசைகளில் நின்று பல ஆயிரம் ரூபாய்க்கு சரக்குகளை வாங்கிச் செல்கின்றனர் குடிமகன்கள். ஆண்களுக்கு சமமாக பெண்களும் வரிசைகளில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.
மதுபான கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் பொதுவாக கூட்டம் நெருக்கியடித்துதான் நிற்கின்றனர். இதனால் மதுபான கடைகளால் கொரோனா வைரஸ் மிக அதிக அளவில் பரவும் அபாயம் உள்ளது எனவும் எச்சரிக்கப்படுகிறது.
இதனிடையே தமிழகத்தில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தில் மதுபானம் மற்றும் கஞ்சா கடைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இன்று முதல் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகின்றன.
பஞ்சாப் மாநிலத்திலும் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டோர்டெலிவரி செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி, ஆந்திரா மாநில அரசுகள் மதுபான விலையை 70%-க்கும் அதிகமாக அதிகரித்தும் குடிமகன்கள் கூட்டம் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.