பஞ்சாப்பில் மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிப்பு- தெலுங்கானாவை தொடர்ந்து அறிவிப்பு
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர்சிங் அறிவித்துள்ளார். தெலுங்கானாவை தொடர்ந்து லாக்டவுனை நீட்டித்துள்ள 2-வது மாநிலம் பஞ்சாப் ஆகும்.
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. மே 3-ந் தேதியுடன் லாக்டவுன் முடிவடைகிறது.
அதேநேரத்தில் கொரோனாவின் தாக்கமும் உக்கிரமாக இருந்து வருகிறது. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? இல்லையா? என்பதில் தெளிவு எதுவும் இல்லை.
இது தொடர்பாக பிரதமர் மோடி, மாநிலங்களின் முதல்வர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸில் ஆலோசனை நடத்தினார். இதில் 11 மாநிலங்களின் முதல்வர்கள் லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
மகிழ்ச்சியான செய்தி.. கொரோனா இல்லாத நகராக மாறியது திருச்சி மாநகரம்.. 26 பேரும் குணமாகினர்!
இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங், தங்களது மாநிலத்தில் லாக்டவுன் மே 3-ந் தேதிக்குப் பின்னர் மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்படும் என அறிவித்திருக்கிறார். அத்துடன் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் பகல் 11 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே மே 7-ந் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். தற்போது பஞ்சாப் மாநிலமும் லாக்டவுனை நீட்டித்து அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.