தலித் தொழிலாளர் போராளி நோதீப் கவுர் மீது போலீஸ் கடுமையான தாக்குதல்.. ஜாமீன் மனுவில் குற்றச்சாட்டு
சண்டிகர்: சண்டிகர்: 23 வயதுதான் ஆகிறது. பெண் வேறு. ஆனால் இந்த இளம் தலித் தொழிலாளர் செயற்பாட்டாளர் நோதீப் கவுர் காவல்துறை மீது நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
பஞ்சாப் மாநிலம் முக்ட்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நோதீப் கவுர். கடந்த மாதம், ஹரியானா மாநிலத்தின் சோனிபட் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஜாமீன் கேட்டு நோதீப் கவுர் தரப்பு, பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், ஐபிசியின் 307 (கொலை முயற்சி) உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பொய் புகார் போட்டு என்னை கைது செய்துள்ளனர்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு நான் ஆதரவு அளித்தேன். சோனிபட் மாவட்டத்தில் குண்ட்லியில் ஒரு போராட்டத்திற்காக மக்களை அணிதிரட்டினேன். எனவே பொய்யான வழக்குகளை போட்டு முடக்கியுள்ளனர்.
போலீசார் என்னை, தலைமுடியை பிடித்து இழுத்து சென்றனர். எனவே போராட்டக்காரர்கள் கோபமடைந்து கோஷமிட்டனர். அவர்களை போலீஸ் லத்தியால் அடித்தது. நான் தாக்கப்பட்டேன், சித்திரவதை செய்யப்பட்டேன், மற்றும் பல காயங்களுக்கு ஆளானேன்.
எந்தவொரு பெண் காவல்துறை அதிகாரியும் இல்லாத நிலையில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, நோதீப் கவுர், சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் வெளியானதும், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் பிப்ரவரி 12ம் தேதி தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கில்தான் ஜாமீன் கேட்டு, நோதீப் கவுர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை 26ம் தேதியான நாளை மறுநாள் கோர்ட் விசாரிக்கிறது. அதேநேரம், நோதீப் கவுர் உடல்நிலை தொடர்பான மருத்துவ சான்று இன்னும் வழங்கப்படவில்லை. ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.