பாஜகவின் தலைவிதி பஞ்சாபில் மட்டுமல்ல மத்தியிலும் முடிவுக்கு வரும் - அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை எளிதாக எடுத்துக்கொளள வேண்டாம் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.
சண்டிகர்: மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும் விவசாயிகளின் போராட்டத்தை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார். பாஜகவின் தலைவிதி பஞ்சாபில் மட்டுமல்ல மத்தியிலும் அதன் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் உள்ள எல்லைப்பகுதிகளில் கடந்த 85 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
சாலை மறியல், ரயில் மறியல் என போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பல கட்ட போராட்டங்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
இந்த போராட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கிய விவசாயிகள் திரளாக கலந்து கொண்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் பஞ்சாப் மாநில உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்குகள் கிடைத்துள்ளன. பல மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், இந்த வெற்றி 2022ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான டீசர் என்று குறிப்பிட்டுள்ளார். "பஞ்சாப் மக்களுக்கு அந்த கட்சிகள் செய்த வஞ்சகத்தையும் துரோகத்தையும் மன்னிக்கவோ மறக்கவோ யாரும் தயாராக இல்லை. பஞ்சாப்பை விட்டு அக்கட்சிகள் வெளியேறுவதற்கான சக்திவாய்ந்த செய்தி இந்த தேர்தல் முடிவுகள் என்றும் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிக்கு சென்ற முதல்வர் அம்ரீந்தர் சிங், விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அம்ரீந்தர் சிங்.
People of all age groups are protesting across India against these anti-farmer laws. This evening I joined some citizens at Matka Chowk in Punjab's capital Chandigarh. Again appeal to the Centre to not take this protest lightly and to repeal these laws. pic.twitter.com/d92v9G6gX4
— Capt.Amarinder Singh (@capt_amarinder) February 17, 2021
பாஜகவின் தலைவிதி பஞ்சாபில் மட்டுமல்ல மத்தியிலும் அதன் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வரும் என்று கூறினார் அம்ரீந்தர் சிங்.
விவசாயிகள் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி தூண்டி விடுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டுவது விவசாய விரோத மனப்பான்மையாகும் என்று தெரிவித்தார்.