குறைந்தபட்ச செயல் திட்டத்தை ஏற்கும் கட்சிக்கே ஆட்சி அமைக்க ஆதரவு: 'ஜேஜேபி' துஷ்யந்த் சவுதாலா
சண்டிகர்: தாங்கள் முன்வைக்கும் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை ஏற்கும் கட்சிக்கே ஆட்சி அமைக்க ஆதரவு தரப்படும் என ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்துள்ளார்.
Recommended Video
ஹரியானாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. ஜேஜேபி மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 19 எம்.எல்.ஏக்கள்தான் யார் ஆட்சி என்பதை தீர்மானிக்க உள்ளனர்.
40 இடங்களில் வென்ற பாஜகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. 31 இடங்களில் வென்ற காங்கிரஸுக்கு 15 எம்.எல்.ஏக்கள் ஆதரவு.
யார் இந்த துஷ்யந்த் சவுதாலா? இந்தியாவை கவனிக்க வைத்த 31 வயது இளைஞர்
தற்போதைய நிலையில் சுயேட்சைகள் ஆதரவுடன் மட்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சிக்கிறது. சுயேட்சைகளில் ஒருவரான கந்தாதான் பாஜகவுக்கு ஆதரவை திரட்டி வருகிறார். தற்போது கந்தாவுக்கு பாஜகவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் 10 இடங்களில் வென்ற ஜேஜேபியின் எம்.எல்.ஏக்கல் கூட்டம் இன்று சண்டிகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக துஷ்யந்த் சவுதாலா தேர்வு செய்யப்பட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் துஷ்யந்த் சவுதாலா கூறியதாவது: ஹரியானாவில் 75% வேலைவாய்ப்புகளை இம்மாநில மக்களுக்கே வழங்க வேண்டும்; முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட எங்களது குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை ஏற்கும் கட்சிக்கே ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்போம்.
இதுவரை எந்த கட்சியுடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இனி சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். ஒரு சில மணிநேரங்களிலோ ஓரிரு நாட்களிலோ நல்ல முடிவு எட்டப்படும். இவ்வாறு துஷ்யந்த் சவுதாலா கூறினார்.